பக்கம் எண் :

சீறாப்புராணம்

95


முதற்பாகம்
 

பெரும்படி பரிமளத்தோ டடக்கஞ் செய்து சிற்றூராகிய அவ் வபுவாவைவிட்டும் நீங்கிச் சென்று மக்காவாகிய நகரத்தை நாடிவந்து சேர்ந்து அவரெல்லாவரும் இவையெல்லாவற்றையும் ஆமினா அவர்களுக்குச் சொன்னார்கள்.

 

209. மாற்றங் கேட்டலு மடமயின் மனமுடைந் தலறித்

    தோற்று மாமழை சொரிந்தெனக் கண்ணினீர் சொரியப்

    போற்றுங் காழகிற் புகைக்குழ னிலம்புரண் டசையக்

    கோற்றொ டிக்கரக் காந்தடா மரைமுகங் குழைக்க.

44

     (இ-ள்) இளமயிலாகிய ஆமினா அவர்கள் தமது நாயகராகிய அப்துல்லா நிரியாணமாயினாரென்ற சமாச்சாரத்தைக் காதிற் கேட்டமாத்திரத்தில், உள்ளந் தளர்ந்து வாய்விட்டொலித்து தோற்றப்படும் பெரிய மேகமானது நீரைச் சொரிந்தாற்போல கண்களிலிருந்து ஜலமானது சிந்தவும், வளர்க்கப்படும் வயிரமுள்ள வகிலினது புகையையுடைய கூந்தலானது நிலத்தின்கண் புரண்டசையவும், வளைந்த வளையல்களையுடைய கைகளாகிய காந்தட்பூக்கள் முகமாகிய தாமரைப் பூவைக் குழைக்கவும்.

 

210. வருந்தி நொந்தழு தாமினா விடைதலும் வளைந்து

    திருந்தி ழைக்கொடி மடவிய ரிரங்குத றிரண்முத்

    திருந்த சூல்வலம் புரியினைச் சூழ்ந்தசங் கினங்க

    ளிரைந்தி ரங்குவ போன்றன வெங்கணு நிறைந்தே.

45

     (இ-ள்) வருத்தமுற்று நொந்தழுது வசக்கேடான மாத்திரத்தில் செவ்வையாகிய ஆபரணாதிகளையுடைய கொடிபோலும் பெண்களெல்லாரும் ஆமினா அவர்களைச் சூழ்ந்திருந் தழுதலானது திரட்சிபொருந்திய ஆணிமுத்தின் வயிற்றின்கண் அமைவுற்றிருக்கும் தெய்வீகத்துவம் பொருந்திய வலம்பரிச் சங்கினைச் சூழ்ந்துள்ள மற்றச் சங்குக் கூட்டங்களெங்கும் பெருகி நிரையா யொலிப்பதை யொத்திருந்தது.

 

211. சலித்து விம்மிய மயிலினைக் கண்டுமெய் தளர

    வலித்த தோபகை விதிகொலோ மகப்பெறும் பலனோ

    பலித்த தேதென வறிகிலோ மெனப்பதை பதைத்தே

    யொலித்தய் யோவென விரங்கின ரூரினி லுளரே.

46

     (இ-ள்) மக்காவென்று சொல்லும் அவ்வூரிலுள்ளார் பலர் அவ்வாறு சஞ்சலமுற்று அழுத மயிலாகிய ஆமினா அவர்களை வந்து பார்த்து இவ்வாமினாவுக்கு இங்ஙன மிலபித்தத்திற்குக் காரணம் இவர்க்கு நேர்ந்திராநிற்கும் விரோதமானது வன்மையுற்றதோ! அல்லது ஹக்குசுபுகானகுவத்த ஆலாவானவன் ஆதிகாலத்திற் கற்பித்த கற்பனையோ! மகவையீனப்புகும்