பக்கம் எண் :

சீறாப்புராணம்

952


இரண்டாம் பாகம்
 

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

 

2563. உரைத்தவை யனைத்துங் கேட்டங் கபூசகு லொழியாத் துன்பம்

     பெருத்துநின் றிடைந்து வாடிப் பிறர்சிலர் தம்மைக் கூவித்

     தரித்தவ ரெவரென் றில்லுட் சார்ந்துநோக் குகவென் றோத

     வரித்திறற் குருளை போன்ற வலியல திலைவே றென்றார்.

98

      (இ-ள்) அவ் விபுலீசு லகுனத் துல்லா வென்பவன் அவ்வாறு கூறிய சமாச்சாரங்க ளியாவையும் அபூஜகி லென்பவன் காதுகளினாற் கேள்வியுற்று நீங்காத வருத்தமானது அதிகரிக்கப் பெற்று நின்று வசங் கெட்டு வாடி அயலா ராகிய சிலரைக் கூப்பிட்டு இவ் வீட்டினகம் தங்கியிருப்பவர் யாவரென்று போய் பாருங்க ளென்று கூற, அவர்கள் போய்ப் பார்த்து விட்டு வந்து இங்கிருப்பவர் நெருங்கிய வலிமையை யுடைய புலிக் குட்டியைப் போன்ற அலி யென்பவ ரல்லாமற் பிறி தொருவருமில்லையென்று சொன்னார்கள்.

 

2564. இல்லுறைந் திரவின் கண்ணே யிருந்தனன் கண்கட் டாக

     வொல்லையிற் புறத்திற் போந்தா னுறுதொலை கடந்தா னன்று

     சொல்லருங் குவடுங் கானுஞ் சுற்றியே திரிவன் றேடிப்

     பல்லரு மெழுக வென்றான் றிசைதிசைப் பரந்து போனார்.

99

      (இ-ள்) அவ்விதஞ் சொல்ல, அவ் வார்த்தைகளைக் கேள்வியுற்ற அபூஜகி லென்பவன் இந்த இரவில் வீட்டின் கண் தங்கியிருந்த அந்த முகம்ம தென்பவன் விரைவில் திருட்டித் தம்பனமாக வெளியிற் போயினான். ஆனால் அவன் அதிக தூரங் கடந்து சென்றவனல்லன் சமீபத்திற் றானிருக்க வேண்டும். ஆதலால் கூறுதற்கருமையான மலைகளிலும் காடுகளிலும் சுற்றித் திரிவான். அவனைத் தேடிப் பலரும் எழும்புங்களென்றான். உடனே அங்கிருந்த யாவர்களும் திசைகடோறும் பரவுதலுற்றுத் தேடிச் சென்றார்கள்.

 

2565. பாடுறைந் திற்புக் கோனைப் பற்றிலார் வீணின் முட்சார்

     காடிறந் தெவர்கள் காண்பார் காண்பது மரிதென் றெண்ணி

     வீடிலாப் புகழ்சேர் வண்மை விறன்முகம் மதுவைத் தானுந்

     தேடிய பெயர்கள் போலச் செல்லுந்தன் றிசையிற் சென்றான்.

100

      (இ-ள்) இபுலீசு லகுனத் துல்லா வென்பவன் வருத்தமானதுறையப் பெற்று வீட்டின் கண் நுழைந்திருந்த அந்த முகம்ம தென்பவனைக் கைகளினாற் பிடித்துக் கொள்ளாத இவர்களில் யாவர்? வீணில் முட்கள் பொருந்திய காட்டினிடத்து