பக்கம் எண் :

சீறாப்புராணம்

954


இரண்டாம் பாகம்
 

2568. அறநெறி வடிவங் கொண்ட அபூபக்கர் மதலை யான

     சிறுவனும் பதியிற் புக்கிச் செய்திக ளனைத்துந் தேர்ந்து

     பொறையிடத் திவர்கட் கோதிப் பொருந்தலர் காண்கி லாது

     முறைமுறை மூன்று நாளு மிவ்வண்ண மொழியா நின்றார்.

103

      (இ-ள்) புண்ணிய நெறியையே தமது வடிவமாகக் கொண்ட அவ்வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களின் பாலகரான அப்துல்லா என்னும் அச் சிறுவரும் திரு மக்கமா நகரத்தின் கண் நுழைந்து அங்கு சத்துராதிகளாகிய காபிர்கள் நடத்துங் கருமங்கள் முற்றையு முணர்ந்து அந்தத் தௌறு மலையின் கண் இந் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் யல்லாகு அன்கு அவர்களுக்கும் கூறிச் சத்துராதிகள் தம்மைக் காணாது அங்கிருந்து  மூன்று தினமும் இவ்வாறு வரிசை வரிசையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

2569. கொறிக்கண்மேய்த் தாமி றென்னுங் கோளரி யெவர்க்குங் தோன்றா

     திறையவன் றூதர் பால்வந் திருந்துபால் கறந்து காய்ச்சி

     நிறையுறப் பருகச் செய்து நெறிவிடுத் தடவி சுற்றித்

     திறனொடு நகரஞ் சேர்ந்து மீண்டுசென் றடைவன் மாதோ.

104

      (இ-ள்) அவர் அவ்விதம் சொல்லிக் கொண்டிருக்க, ஆமிறென்னு மபிதானத்தையுடைய கொல்லுதற் றொழிலைக் கொண்ட சிங்க மானவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு யாவர் கண்களுக்குந் தெரியாமல் இறைவனான ஜல்லா ஜலாலகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பக்கத்தில் வந்துறைந்து அவ்வாடுகளில் பாலைக் கறந்து காய்ச்சிப் பூரணமாக அவர்களை யருந்தும் வண்ணம் செய்து வலிமையுடன் அம்மார்க்கத்தை விட்டுக் காடுகளைச் சுற்றித் திரு மக்கமா நகரத்தை யடைந்து மறுத்தும் அது போல் மற்றைய நாட்களிலும் அங்கு போய் வந்தான்.

 

2570. நிலம்பிற ழாத நன்னேர் நெறிமறை தவறா வள்ளல்

     சிலம்புறைந் திருப்பக் கண்ட சிலம்பியப் பொதும்பர் வாயிற்

     சலம்புரிந் திகலா நின்ற தரியலர் நோக்கா வண்ணம்

     பலன்பெற மெய்நூ லார வேய்ந்தது பரிவி னன்றே.

105

      (இ-ள்) அவன் அவ்வாறு போய் வர, இவ்வுலக மானது வேறுபடாத தீனுல் இஸ்லா மென்னும் நல்ல உண்மையினது