பக்கம் எண் :

சீறாப்புராணம்

972


இரண்டாம் பாகம்
 

பார்க்கவும் செய்கையில்லாது சிதைந்து பின்னப் படும்படி இந்த மலையி னிடங்களெல்லாவற்றினும் மடங்கித் திரிவதே யல்லாமல் புறப்படுதல் அருமையான விடய மென் றெண்ணிப் பிரமித்தேன்.

 

2618. போது தற்கிட மன்றியும் புதியனா யகன்றன்

     றூத ரைத்தெரி சித்திட வரும்வழி தூர்த்த

     பாத கத்தையு நினைத்துமைக் கொடுவிடம் பழுத்த

     தீது றுங்கொடிற் றெயிற்றறக் கடித்தனன் சிறியேன்.

39

      (இ-ள்) சிறியே னாகிய யான் அவ்வாறு பிரமித்துச் செல்லுதற்கிட மில்லாததையும் புதிய ஆலத்தை யுடையவனான எப் பொருட்கு மிறைவனாகிய ஜல்ல ஷகுனகு வத்த  ஆலாவின் றசூலான உங்களைக் கண்களினால் தெரிசிக்கும்படி வந்த மார்க்கத்தை அடைத்த துரோகத்தையும் மனதின் கண் சிந்தித்துக் கரு நிறத்தினது கொடுமையையுடைய நஞ்சானது கனியப் பெற்ற தீமை பொருந்திய கதுப்பினது பற்களா லவர்களை முற்றும்படி கடித்தேன்.

 

2619. நெடிய காலமுற் றொருபல னினைத்தவர்க் கடுத்து

     முடியும் போழ்தினிற் றடுப்பவ ரெவரையு முரணித்

     தடித னன்றெனு மறிவினாற் றடிந்ததே யன்றிப்

     படியி னேர்தவ றிலனென வுரைத்தது பாந்தள்.

40

      (இ-ள்) அந்தச் சர்ப்ப மானது நீண்ட காலமாக ஓர் பிரயோசனத்தைப் பொருந்திச் சிந்தித்தோர்க்கு அப் பிரயோசனம் நெருங்கி நிறைவேறுங் காலத்தில் தடுப்பவர்க ளான யாவரையும் மாறுபட்டுக் கொல்லுதல் நன்மையே யென்று சொல்லும் வேதகாம அறிவினால் யான் கொல்லும் வண்ணங் கடித்ததேயல்லாமல் இப் பூமியின் கண் எனது ஒழுங்கை யான் தவறவில்லையென்று கூறிற்று.

 

2620. பாந்தள் கூறிடக் கேட்டலும் பதுமமென் மலரிற்

     சேர்ந்த பொன்முகக் குளிர்ப்பொடுங் களிப்பொடுஞ் சிறப்ப

     வாய்ந்த வாய்மையின் விளித்தரு குறவர வழைத்துக்

     கூர்ந்த தம்மனத் துவகையிற் சிலமொழி கொடுப்பார்.

41

      (இ-ள்) அந்தச் சர்ப்பமானது அவ்வாறு கூற, அவற்றை நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் காதுகளினாற் கேள்வியுற்ற மாத்திரத்தில் அதை மெல்லிய தாமரைப் புட்பம் போலும் பொருந்திய அழகிய தங்களின் வதனத்தினது குளிர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் சிறக்கும் வண்ணஞ் சேர்ந்த சத்திய வாசகத்தாற் கூப்பிட்டுப் பக்கத்தில் நெருங்க வரும்படி செய்து பெருகிய தங்களிதயத்தினது களிப்புடன் சில வார்த்தைகளைச் சொல்லுவார்கள்.