இரண்டாம் பாகம்
(இ-ள்) என்னைப்
போன்ற சிறியவர்கள் பெரிய நிந்தைகள் நெருங்கிய குறையையுடைய குற்றங்கள் ஆயிரம்
செய்தாலும், பொன்னை நிகர்த்த இதயத்தை யுடைய பெரியவர்கள் அவற்றைச் சகிப்பார்களென்று
சொல்லும் வார்த்தையை உங்களிடத்தில் வறியே னான யான் எனது மனதிற்குப் பொருந்தும் வண்ணம்
பார்த் துணர்ந்தேன். ஆதலால் சிறியேன் பிழைக்கும் தன்மையோடு இந்தப் பூமியின் கண்
வாழும்படி முன் போலக் காப்பாற்றிப் புரத்தல் வேண்டும். அப்படிப் புரப்பது உங்களது வேதத்தினது
ஒழுங்காகும்.
2672.
உறிதியென மனத்திருத்தி
யெனக்கிரங்கிப்
புடவிவிடற் குரைசெய்
தீரான்
மறுமொழியில் லெனவகல்வே
னினந்தேடி
வருபவர்க்கு மறைத்துக்
கூறி
நெறியுடனன் குரைத்துமணி
மூதூர்கொண்
டணைகுவனிர் ணயமீ
தென்னைப்
பெறுமவர்க டம்மாணை குபலாணை
யுறுதியெனப் பிதற்றி
னானால்.
47
(இ-ள்) இப்போது
கூறியவைகளை நீங்கள் உண்மை யென்று இதயத்தின் கண்ணிருக்கும்படி செய்து எனக்காக இரக்க முற்று
இப்பூமியை விடுவதற்குக் கட்டளை யிடுவீர்களே யானால் யான் வேறு வார்த்தை யில்லை யென்று
இவ்விடத்தை விட்டும் நீங்கிச் செல்லுவேன். இன்னம் உங்களை விசாரித்து வரப்பட்டவர்களுக்கு
இங்கு நீங்கள் செல்லும் சமாச்சாரத்தை ஒளித்துச் சொல்லி ஒழுங்கோடும் நல்ல
வர்த்தமானங்களைப் புகன்று அழகை யுடைய பழமையைக் கொண்ட பதியாகிய திரு மக்கமா
நகரத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்ச் சேருவேன். இஃது சத்தியம். என்னை யீன்ற தாய்
தந்தையர்கள் பேரிலாணை யாகக் குப லென்னும் எனது தம்பிரான் பேரி லாணையாகச் சத்திய மென்று
உளறினான்.
2673.
நிற்குநிலை நில்லாது
வசனமறுத்
திருமுறைநிண் ணயமில்
லேனா
லெற்குரைக்க நாவிலையோர்
நொடிப்போதி
லிருதாளு மிறுமல் லாது
பொற்பரியி னுயிருமென
துயிருமழி
வதுசரதம் பொருவி லாத
நற்குணத்தீ ரழித்தலுங்காத்
தளித்தலுநின்
கிருபையென நவிற்றி
னானால்.
48
(இ-ள்) ஒப்பற்ற நல்ல
குணத்தை யுடையவரே! யான் நிற்கின்ற நிலைமையில் நில்லாது உங்களது வார்த்தைகளைத் தவறி
|