பக்கம் எண் :

சீறாப்புராணம்

998


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அந்த  இடைச் சேரியின் கண் வந்து அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் தாங்க ளேறியிருந்த அருமையான பெரிய ஒட்டகத்தை விட்டும் பூமியினிடத்திறங்கி எனது பிதாவாகிய நபிகட் பெருமானே! நாம் இவ் விடத்திலிருந்து இளைப்பாறிப் பின்னர்ச் செல்குவோ மென்று கூறி, அதற்கு நான்கு வேதங்களையு முணர்ந்த எப் பொருட்கும் இறைவராகிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனப் பொருத்தமுற்றுப் பந்த ரில்லாமல் வெளியானது தோற்றா நிற்கும் ஓர் வீட்டினது பக்கத்தில் போனார்கள்.

 

2682. அம்ம லோதிவெண் ணூலினிற் பிறங்கிட வழகார்

     கொம்மை வெம்முலை தாழ்ந்தணி வயிற்றிடை குழைய 

     வம்மி னியாவரென் றொருமொழி வழங்கியங் கிருந்தா

     ளும்மி மஃபதென் றிடும்பெயர் விருத்தைய ளொருத்தி.

7

      (இ-ள்) அவ்விதம் போக, உம்மி மகுப தென்று கூறும் அபிதானத்தை யுடைய கிழவியாகிய ஒரு பெண்ணானவள் இருட்டை யொத்த அழகிய தனது கூந்தலானது வெண்ணிறத்தையுடைய நூலைப் போல் பிரகாசிக்கவும், சுந்தரத்தைப் பொருந்திய திரண்ட இன்பத்தைத் தருகின்ற தனமானது கவிந்து சிறந்த உதரத்தினிடத்து நெகிழ்ந் தொன்றாகவும், நீங்கள் யாவர்? வாருங்க ளென்று ஒப்பற்ற வார்த்தைகளைக் கூறி அவ் விடத்தில் தங்கியிருந்தாள்.

 

2683. ஆயர் தங்குல விருத்தையை விளித்துநின் னகத்துட்

     போயெ மக்குண வுளதெனிற் றருகெனப் பொருந்தாக்

     காயும் வன்கலிச் சாமமும் வறுமையுங் கலந்து

     மாயு மில்லின ளருள்வதொன் றிலையென வகுத்தாள்.

8

      (இ-ள்) அவ்வாறு தங்கியிருந்த இடைச் சாதியினது கிழவியாகிய அந்த உம்மி மகுப தென்பவளை அவர்கள் கூப்பிட்டு உனது வீட்டினகம் போய் எங்களுக்கு யாதாவது போசன முளதேல் கொண்டுவந்து தருவா யாக வென்று கேட்க, யான் பொருந்தாது வெறுக்கா நிற்கும் கொடிய துன்பத்தை யுடைய பஞ்சமும் தரித்திரமும் விரவி மாளுகின்ற வீட்டை யுடையவள். என்னிடத்தில் உங்களுக்குத் தரும் ஆகாரம் ஒன்று மில்லை யென்று சொன்னாள்.

 

2684. திரைக்கு மெய்யினண் மனைப்புறஞ் செறிமயிர்க் கொறியொன்

     றிரைக்கு நொந்தவ ணிருப்பக்கண் டிவ்வுரு மடியிற்

     சுரக்கும் பாலிலை யோவென மகிழ்வொடுந் தூண்டி

     யுரைக்க நந்நபி முகம்மதுக் கெதிரெடுத் துரைப்பாள்.

9