இரண்டாம் பாகம்
(இ-ள்) அவள் அவ்வாறு
சொல்ல, நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சுருங்கிய
சரீரத்தை யுடையவளான அந்த உம்மி மகுப தென்பவளின் வீட்டினது பக்கத்தில் நெருங்கிய உரோமங்களை
யுடைய ஓராடானது உணவிற்காக வருந்தி அவ்விடத்தில் தங்கி நிற்பதைக் களிப்போடும் பார்த்து
இந்த உருவாகிய ஆட்டினது மடியில் ஊறா நிற்கும் பாலில்லையோ? என்று அவ் வாட்டைக் கை விரலினாற்
சுட்டிக் கேட்க, அந் நபிகட் பிரானவர்களுக்குப் பதி லெடுத்துச் சொல்லுவாள்.
2685.
என்னி னுமுதிர்ந் தரும்பெரு
நோயினா லிடைந்த
வன்ம லட்டது திருவதற்
குயிரிலா வரடு
தன்ம மில்லவண் மனையினிற்
சார்ந்தநீ ரிசைத்த
லின்மை நோயினும் வலிதென
வவசமுற் றிசைத்தாள்.
10
(இ-ள்) இஃது என்னைப்
பார்க்கிலும் வயதான முதிர்தலடைந்து அரிய பெரிய வியாதியினால் வருத்த முற்ற கொடியமைமையை யுடையது.
அன்றியும், சஞ்சரிப்பதற்குப் பிராண னறற வரட்சியை யுடையது. புண்ணிய மற்றவ ளாகிய எனது வீட்டின்
கண் வந்து பொருந்திய நீங்கள் கூறியவை எனது தரித்திர மாகிய ஓர் வியாதியைப் பார்க்கிலும்
பெரிய தென்று மயக்க மானது அதிகரிக்கப் பெற்றுக் கூறினாள்.
2686.
விருத்தை யென்னுமத் தொறுவிசஞ்
சலமொழி விளம்பக்
கருத்தி னூடுற விரங்கிமா நோயினிற்
கசிந்து
வருத்த முற்றமை மலட்டினைக்
கொணர்கென வலிதிற்
றிருத்தி மென்மெல முகம்மது
திருமுனம் விடுத்தாள்.
11
(இ-ள்) கிழவி யென்று
கூறா நிற்கும் அந்த இடைப் பெண்ணாகிய உம்மி மகுப தென்பவள் அவ்வாறு வியசன மான வார்த்தைகளைக்
கூற, நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
தங்களின் சிந்தையி னூடு மிகவுங் கசிந்து நீ பெரிய வியாதியினா லுருகித் துன்பத்தை யடைந்த மைமையை
யுடைய அந்த ஆட்டை கொண்டு வருவாயாக வென்று சொல்ல, அதை வலிமை கொண்டு வருவாயாக வென்று
சொல்ல, அதை வலிமை யோடுஞ் செவ்வைப் படுத்திப் பையப் பையக் கொண்டு வந்து அவர்களின் தெய்வீகந்
தங்கிய முன்பில் விட்டாள்.
2687.
நிகரி லானருட் டூதுவர் நெடுங்கர
நீட்டித்
தகையு மைமுது கிடத்தினிற்
பயப்பயத் தடவப்
பகரு தற்கரி தாயிடந் தழைத்துடல்
பருத்துப்
புகர றக்கொழுந் திளமையிற்
செழுமையும் பொதிந்த.
12
|