பக்கம் எண் :

முதற் காண்டம்291

"இளி செயும் என்று, இம் மணத்தை ஏவிய கால், வெரு
                                   உற்றேன்.
நளி செயும் என் உயிர் நாதன், நவை அறும் நின்
                                   கன்னிமையால்,
அளி செயும் என் கற்பு, இனிதாய் அளிப்பதற்கு அன்றோ
                                   மணம் ஆய்,
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது? அறிகிலன்
                                   யான்,"

     "ஆண்டவன் இத்திருமணத்திற்கென்று என்னை ஏவியபோது, அந்த
வாக்குறுதிக்கு இது இழிவைத் தருமென்று அஞ்சினேன், குளிர்ந்த
கருணையைச் செய்யும் என் உயிருக்குத் தலைவனாகிய ஆண்டவன்,
அன்பு செய்யும் என் கற்பை, குற்ற மற்ற உன் கன்னிமையைக் கொண்டு
இனிதாய்க் காப்பதற்கென்று அல்லவா இத்திருமணம் ஆயிற்று? இவ்வாறு
களிப்பைத் தரும் என் ஆண்டவனுக்குச் செய்யத் தக்க பதில் நன்றி எது?
அவ்வாறான ஒன்றை நான் அறியேன்,"
 
                    22
கைமாறு மரிதெனிலக் கடன்கழிப்ப வீவளவும்
பொய்மாறுங் காட்சியினாற் பொற்புயரெங் கற்பினையாம்
மெய்மாறுஞ் செயிரின்றி வெய்யமல ரெனக்காத்து
மை மாறுந் திருத்தகுந்தாள் வாழ்த்திடனன் றேயென்றான்.
 
"கைமாறும் அரிது எனில், அக் கடன் கழிப்ப, வீவு அளவும்,
பொய் மாறும் காட்சியினால், பொற்பு உயர் எம் கற்பினை யாம்
மெய் மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் எனக் காத்து,
மை மாறும் திருத் தகும் தாள் வாழ்த்திடல் நன்றே," என்றான்

     "பதில் நன்றி செய்தல் நமக்கு அரியதாய் இருப்பினும், அதற்கான
நன்றிக் கடனை ஒருவாறு செலுத்தும் வகையில், சாகும் வரையிலும்,
பொய்படுதல் நீங்கிய அறிவின் துணை கொண்டு, அழகில் உயர்ந்த நம்
கற்பை உண்மைக்கு மாறுபட்ட குற்றம் எதுவும் இல்லாதவாறு விரும்பத்
தக்க மலரைப்போல் நாம் பாதுகாத்து, இருளை மாறச் செய்யும் செல்வம்
எனத் தகும் திருவடிகளை வாழ்த்திக்கொண்டிருத்தல் நல்லதே". என்று
சூசை முடித்துக் கூறினான்.