பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்19

             35
கிளிய ழக்குயில் கேட்டழத் தேனுணா
தளிய ழச்சிறை நைந்தழ வாவென
வளிய ழத்துயர் மல்கிவ னத்தெலா
வுளிய ழத்தக வோரழ வேகினார்.
 
கிளி அழ, குயில் கேட்டு அழ,
                   தேன் உணாது
அளி அழ, சிறை நைந்து அழ, ஆ! என
வளி அழ, துயர் மல்கி வனத்து எலா
உளி அழ, தகவோர் அழ ஏகினார்.
    
     கிளிகள் அழவும், அதனைக் கேட்டுக் குயில்கள் அழவும், தேனை
உண்ணாமல் வண்டுகள் அழவும், அன்னங்கள் நைந்து அழவும், ஆ! என்று
காற்று அழவும், துயரம் மிகுந்து அவ்வனத்தின் எல்லா இடங்களும்
அழவுமாக, பெருமை வாய்ந்த அவர்கள் அழுது கொண்டே சென்றனர்.
'சிறை' என்பது சிறகுகளை உடைய அன்னத்திற்குக் காரண இடுகுறிப் பெயர்.


           36
கான்ம றந்தன காமல ரன்னதே
தேன்ம றந்தன தேனின மன்னதே
பான்ம றந்தன மான்பற ழன்னதே
யான்ம றந்தன தம்பிள்ளை யன்னதே.
 
கான் மறந்தன கா மலர், அன்னதே;
தேன் மறந்தன தேன் இனம், அன்னதே;
பால் மறந்தன மான் பறழ், அன்னதே;
ஆன் மறந்தன தம் பிள்ளை, அன்னதே.

     அதுபோலவே, காட்டிலுள்ள மலர்கள் வாசனை வீச மறந்தன;
அதுபோலவே, வண்டினங்கள் தேனை உண்ண மறந்தன; அதுபோலவே,
மான் குட்டிகள் பால் அருந்த மறந்தன; அதுபோலவே, பசுக்கள் தம்
கன்றுகளை மறந்தன.

            37
சுருதி யேந்துசு தற்றுமிப் பேனெனக்
கருதி யேந்துகு ரோதங்க தித்தெனப்
பருதி யேந்துப டம்பட ராமுனர்
குருதி யேந்துகு ணக்குசி வந்ததே.