பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்20

சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என,
கருதி ஏந்து குரோதம் கதித்து என,
பருதி ஏந்து படம் படரா முனர்,
குருதி ஏந்து குணக்கு சிவந்ததே.

     வேதத்தைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த மகனைக்
கொல்லுவேனென்று எரோதன் திட்டமிட்டுத் தன் மனத்தில் கொண்டிருந்த
பகையை வானம் கண்டு சினந்தாற்போல, ஆதவன் தாங்கிக் கொண்டிருந்த
இருளாகிய போர்வை விலகுவதற்கு முன்னரே, இரத்தம் பாய்ந்த தன்மையாய்
அதன் முகமாகிய கீழ்த்திசை சிவந்தது.

     பகைக்கு மனமும், சினத்திற்கு வானமும், போர்வைக்கு இருளும்,
கிழக்கிற்கு முகமும் வருவித்து உரைக்கப்பட்டன. சுதன் + துமிப்பேன்
என்பது, 'சுதனைத் துமிப்பேன்' என்ற பொருளில், 'சுதற்றுமிப்பேன்' என
நின்றது.

               38
முழவெ ழுந்தொனி யொப்பமுந் நீரொலி
யெழுவெ ழுந்துபொ ரக்கதி ரெய்சரம்
விழவெ ழுந்தவெய் யோன்சிவந் தெய்திவா
னழவெ ழுந்துய ராற்றில தோன்றிற்றே.
 
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி
எழ, எழுந்து பொரக் கதிர் எய் சரம்
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி, வான்
அழ, எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே.

     போர் முரசினின்று எழும் ஓசைக்கு ஒப்பாகக் கடல் ஒலி முழங்க,
அப்பகைவன் மேல் எழுந்து போர் புரிய எய்யும் கதிராகிய அம்புகள்
பாய்ந்து விழுமாறு உதித்தெழுந்த கதிரவன் முகம் சிவந்து தோன்றி, வானம்
அழுவதைக் கண்டு, தானும் எழுந்த துயரத்தை ஆற்ற மாட்டாததுபோல்
தோன்றியது.

              39
பானும் பானொடு பாசறை பட்டழும்
வானும் வானொடு மண்ணுமி ரங்கின
வேனு மேதுமு ணர்கில மாக்களுங்
கோனுங் கோடணை கொண்டிரங்
                       காயினார்.