பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்131

2083 ஆகஸ்ட் 11

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சர்யத்துடன்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்