பக்கம் எண் :

138ஆத்மாநாம் படைப்புகள்

அந்தப் புளியமரத்தை

நேற்றிலிருந்து
அந்தப் புளியமரத்தை
வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்

முதலில்
புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள்
சிறிய சிறிய கிளைகளை
முறித்துக்கொண்டார்கள்
இலைகள் மலர்கள்
உதிர உதிரச் சிறிய
கிளைகள் பூமியைத் தழுவின

சிறிய கிளைகள் இழந்த மரம்
அருவ உருவில்
வானத்தை
உறிஞ்சிக்கொண்டிருந்தது

மரத்திலிருந்து இறங்கியவர்கள்
ஒரு மாபெரும்
மரமறுக்கும் ரம்பத்தைக்
கொண்டுவந்தார்கள்

புளியமரத்தின்
அடியைக் குறிபார்த்துக்
கீறிக்கொண்டிருந்தார்கள்
பொடித்துகள்கள்
இருபுறமும் கசிய

நெடுமரத்தைச் சாய்த்தார்கள்
மீதம் உள்ள கிளைகளையெல்லாம்
வெட்டிவெட்டி அடுக்கினார்கள்

கட்டை வண்டியில் ஏற்றிப்
புறப்பட்டார்கள்

இலை தழைகளுக்கிடையே
ஒரு புளியஞ்செடி
தன்னைப் பார்த்துக்கொண்டது