பக்கம் எண் :

148ஆத்மாநாம் படைப்புகள்

காலம்

என் கால்கள் நடந்த தெரு
ஒரு பரத்தையாய் மாறிவிட்டது
குச்சு வீடுகள்
செங்கற்களை ஒளித்துக்கொண்டு
சுண்ணாம்பில் மினுக்குகின்றன
மறைக்கும் கோவணச் சுவர்கள்
உரத்து அழைப்பை விடுக்கின்றன
பேடித் தலைவர்கள்
பிறந்த நாள் மாலை, கிரீடம்,
புன்சிரிப்புடன்
மக்களை ஏளனம் செய்கின்றனர்
போலி உலகப் படங்களின்
விளம்பரங்களோடு,
கட்டை விரலை முட்டி, ரத்தம் கசிய
முத்தம் கொடுத்த கற்கள்
மண்ணுள் மறைந்துவிட்டன.
நான்
நடந்த தெரு மண்
இன்று,
எனக்கு முன்னும் பின்னும்
பிறந்த மனித விலங்குகள்
வாகனங்களால் அரைபட்டு
முகப்பூச்சு சுண்ணாம்பென
மிருதுவாய் மாறிவிட்டது
தெருவில் மனிதர் கால்களை
மட்டும் அடுக்கி நான் நடக்கிறேன்
விஷக்காற்றை உறிஞ்சிக்கொண்டு