பக்கம் எண் :

140எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

‘‘எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்’’.                                               (பா. 102)

காளைகள் கட்டுக்கடங்காமல் ஓடின; அதனால் தூசி யெழுந்தது; வானத்தை மறைத்தது. பலவீரர்கள் அக்காளைகளை மடக்கினர்; அவைகளின் முட்டல்களைத் தங்கள் மார்பிலே ஏற்றனர்; அக்காளைகளிற் பல கொம்புகளுடன் தலை கவிந்தன. ’’ அக்காட்சியைக் கண்ட பலர் கலக்கமுற்றனர்’’.

அவிழ்த்துவிடப்பட்ட காளைகள்-அவைகளைப் பிடிக்கும் வீரர்கள் -அந்நிகழ்ச்சியைக் காணும் பொது மக்கள் ஆகிய இக்காட்சிகளை இச்சொல்லோவியத்திலே காணுகின்றோம்.

‘‘தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு.                                       (பா. 103)

காளைகளை அடைந்திருக்கும் வட்டாரத்திற்குள்ளே, அவைகளைப் பிடிப்பதற்காக விரும்பி விரும்பி உள்ளே புகுந்த இடையர்களைத், தெரிந்து தெரிந்து காளைகள் தங்கள் கொம்புகளால் குத்தின’’

‘‘கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்                                           (பா. 103)

கொல்லுகின்ற காளையின் கொம்பைப் பிடித்து அடக்க அஞ்சுகின்றவன் கோழை; ஆயர் மகள் அவனை இப்பிறப்பில் மணம் புரிந்துகொள்ள விரும்பமாட்டாள்; மறு பிறப்பில் மணக்கவும் விரும்பமாட்டாள்”

ஆயர்களின் செல்வம் ஆடு மாடுகள். அவைகளை அடக்கியாளும் திறமை அவர்களுக்கு வேண்டும்.