பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்167

தன்மையாகச் செய்யும் உன்னுடைய அருள், நீர் நிரம்பிய மேகத்தைப் போன்றதாகும். இவை நாவன்மையுடைய அந்தணர்களின் அரிய வேதங்களிலே கூறப்படும் பொருள்.

வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை, நாடின் இருநிலம்; யாவர்க்கும்
சாயல் நினது வான்நிறை; என்னும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே’’.                  (பா. 2. வரி 54-57)

இவைகள் சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் வேதப் பொருள்களை அறிந்திருந்தனர்; அவைகளைத் தங்கள் செய்யுட்களிலே அமைத்துப் பாடினர்; என்பதற்குச் சான்றுகள்.

திதி, தருமன், மாயை, பிருங்கலாதன், மாதிரம், அவியாராதனை, சிரம் காரணம், கதி, சலதாரி, மார்க்கம், சனம், சரணம், யாத்திரை, சோபனம், அர்ச்சனை; இவை போன்ற பல வடசொற்கள் பரிபாடற் செய்யுட்களிலே கலந்து கிடக்கின்றன.

பண்டைத் தமிழர்கள் வடமொழியையோ, வடமொழிச் சொற்களையோ, வடநூற் கருத்துக்களையோ வெறுக்கவில்லை. அவைகளைத் தமிழ் நூல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர். என்பதை மேலே காட்டியவைகளைக் கொண்டு அறியலாம்.

கலைப் போட்டி

கலைஞர்களுக்குள் போட்டி ஏற்பட்டால் கலை வளரும்; ஒவ்வொரு கலைஞரும் தம்மைச் சிறந்தவராகக் காட்டிக்கொள்ள ஆசைப்படுவர்; தாங்கள் பயின்ற கலையிலே மேலும் மேலும் முன்னேற முனைவர். இது இயற்கை.

கலை வளர்ச்சியின் பொருட்டுச் சங்க காலத்திலே கலைஞர்களுக்குள் போட்டிகள் நடைபெற்று வந்தன.