28 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘குன்றக் குறவன் சாந்த நறும்புகை தேம்கமழ் சிலம்பின் வரையகம் கமழும் (பா. 253) மலையில் வாழும் குறவன் புகைக்கின்ற சந்தனத்தின் நல்ல புகை தேன்மணம் கமழும் மலைமுழுவதும் நறுமணம் வீசும்”. ‘‘கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் (பா. 296) குறமகள் காவல் காக்கும் பெரிய கதிர்களை யுடைய தினைப்புனம்”. இவைகள் குறிஞ்சி நிலத்தின் இயற்கைத் தோற்றத்தை எடுத்துக் காட்டுகின்றன. பாலை சூரிய வெப்பத்தால் வறண்டு கிடக்கும் நிலம் பாலை நிலமாகும். ‘‘கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய வானீர்ப் பத்தல்யானை வவ்வும் கல்அதர் (பா. 304) சூதுவாதறியாத இடையர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் கோலின் துணைகொண்டு தோண்டிய ஆழமான நீர்க்குழியை யானைகள் தாம் தண்ணீர் குடிப்பதற்காகக் கவர்ந்து கொள்ளும். இத்தகைய கற்கள் நிறைந்த வழி.” ‘‘சிலைவில் பகழிச் செந்துவர் ஆடைக் கொலைவில் எயினர் (பா. 363) வலிய வில்லுக்கேற்ற அம்பினையும், அழுக்கடைந்த செந்நிற ஆடையையும் வழிப்போக்கரைக் கொல்லும் வில்லையும் உடைய வேடர்கள்’’ இவர்கள் பாலை நிலத்திலே வாழ்பவர்கள். |