30 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பள்ளங்களில் எல்லாம் தவளைகள் கத்த, மேடுகள் தோறும் விரும்பத்தக்க பறவைகள் ஒலிக்க, அதோ பார், மழைக்காலம் தொடங்கிவிட்டது.” இவை முல்லை நிலத்தின் இயல்பை எடுத்துக் காட்டுகின்றன. தமிழர் கொள்கை ஒவ்வொரு குடும்பமும் வறுமையின்றி நன்றாக வாழ வேண்டும்; எல்லாக் குடும்பங்களிலும் உணவுப் பொருள்களும் ஏனைய செல்வங்களும் ஏராளமாக இருக்கவேண்டும்; இல்லற தர்மம் இனிது நடைபெற்று எல்லோரும் இன்புற வேண்டும். நாட்டிலே விளைவுப் பொருள் பெருகவேண்டும். உழவுக்கும், மக்கள் அருந்துவதற்கான பாலுக்கும் பயன்படும் மாடுகள் செழித்திருக்க வேண்டும். மக்கள் நோயின்றிப் பசியின்றி மகிழ்ந்து வாழவேண்டும். இவை பண்டைத் தமிழ் மக்களின் கொள்கை. இக் கொள்கையைச் சில ஐங்குறுநூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன. ‘‘நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க என வேட்டோளே யாயே. (பா. 1) நெல் முதலிய பல தானியங்களும் சிறந்திருப்பதாக, பொன் மிகவும் நிறைந்திருப்பதாக; என்று விரும்பினாள் எமது தலைவி.” ‘‘விளைக வயலே; வருக இரவலர்; என வேட்டோளே யாயே. (பா. 2) வயல்களிலே தானியங்கள் நன்றாக விளையட்டும்; இரவலர்கள் உதவி வேண்டி ஏராளமாக வரட்டும்; என்று விரும்பினாள் எம் தலைவி.” ‘‘பால்பல ஊறுக; பகடுபல சிறக்க; என வேட்டோளே யாயே. (பா. 3) |