பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

101

ராவார் ‘ இந்திரன் அக்கினி இயமன் நிருதி-வருணன் வாயுகுபேரன் ஈசானன். ’

    எண்மர் திசாதிபருள் இந்திரனது பதவியும் குபேரனது சம்பத்துமே மக்கள் விரும்பும் சிறப்புடையனவாகக் கோடல் மரபாதலின் அவர் இருவருமே கொள்ளப்பட்டனர்.

(88)

89. சிறக்கத் தக்கது கருவையான்
        திருவடி நேயம் ;
    மறக்கத் தக்கது மற்றுள
        சமயத்தின் மயக்கம் ;
    துறக்கத் தக்க(து)இவ் வுடம்பையான்
        என்றுறு தொடர்பு;
    பிறக்கத் தக்கது சிவானந்த
        வாரியின் பெருக்கே.

    திருக்கருவைச் சிவபெருமானது திருவடிக்கீழ் வைக்கும் அன்பே சிறக்கத் தகுதியானது ; (சைவத்தின்) வேறாக உள்ள மதங்களில் மயங்குதலே மறக்கத் தகுதியானது; இவ்வுடம்பை யான் என்று பற்றியிருக்கும் பற்றே விட்டொழியத் தகுதியானது ; சிவானந்த வெள்ளமாகிய பெருக்கே உண்டாகத் தகுதியானது.

    தக்கது - தேற்றப் பொருள்பட்டு நிற்கும் தொழிற்பெயர் ; வியங்கோட் பொருட்டென்பது முண்டு. நேயம்-அன்பு.  தொடர்பு-பற்று.  வாரி-பெருக்கு-வெள்ளம்.  வாரியின், இன் தவிர்வழிவந்த சாரியை.

(89)

90. பெருகு காதல்கொண் டனுதினம்
பேதைநெஞ் சடியேன்
    உருகி நாடவும் வெளிப்படா
        உனைஉளத் துணர்ந்தேன் ;
    இருக ணாரவும் காண்பதற்(கு)
        என்றெதிர்ந் திடுவாய்,
    கருகு கண்டனே ! கருவையிற்
        களாநறுங் கனியே!