பக்கம் எண் :

116

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    அம்-அழகு; சாரியை யெனலுமாம்.  படலை-மார்பிலணியும் மாலை.  மன்று-பொதுவிடம்.  கடி-சிறப்பு.  பூஞ்சண்பகம், ‘பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்’ ஆதலால் ஞகரந் தோன்றியது.  கா-சோலை.  வேரி-வாசனை. அடிகள்-சுவாமிகள், மீ-மேல்.  பரிப்பவன்-காப்பவன்.  நம்பன்-நம்பியடைதற்கு இடமானவன் ; இறைவன்.

    ‘தில்லைமாநகர்க் கனகமன்றினின் றாடிபோற்றி நீள்’ என்பதும் பாடம்.  ‘சோலை வாவிசூழ்’ என்பதும் பாடம். ‘வான் வெண்பிறைக் கொழுந்திலகு வார்சடை வெள்ளை மேனியாய்’ என்பதும் பாடம்.

    தில்லைமன்றுள் சிவகாமசுந்தரி கண்டு மகிழச் சிவபெருமான் திருநடனம் புரிதலை,

தேய்பொடி வெள்ளைபூசி யதன்மே லொர்
    திங்கடிலகம் பதித்த நுதலர்
    காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
    கரிகாடர் காலொர் கழலர்
    வேயுட னாடுதோளி யவள்விம்ம வெய்ய
    மழுவீசி வேழஉரி போர்த்
    தேயிவ ராடுமாறு மிவள் காணுமாறு
    மிதுதா னிவர்க்கொ ரியல்பே.

என்ற தேவாரத் திருவாக்கினும் காண்க.  ‘தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி’ என்று திருவாய்மலர்ந்தருளினார் திருவாதவூரடிகள்.  அநாதி மலத்திற் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களை அக்கட்டகற்றித் தொழிற்படுத்தி அவ்வாற்றால் ஆணவ வலியைக் கெடுத்துப் பேரின்பப் பெருவாழ் வளிக்கும் அருட்குறிப்போடு, சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகம் என்னும் ஐந்தொழிலும் இயற்றும் நடமாதலால் ‘ கடிநடம் ’ என்றார்.

(99)