பக்கம் எண் :

12

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    சிவபெருமானே குருவுருவாய் எழுந்தருளிப் பக்குவான்மாக்கட்கு அருள்செய்வான் என்பது நூற்றுணிபாகலான் ‘ஆண்டகுரவனாவானை’ என்றார். ‘ மான்காட்டி மானையீர்க்குங் கொள்கையென அருள்மௌன குருவாய் வந்து’ என்னும் தாயுமான சுவாமிகள் திருவாக்கையுங் காண்க. ஆட்கொள்ளுதலால் ஆம் பயன் பிறவியறுதல் ;  பிறவியறுதலால் ஆம் பயன் சாலோகமுதலிய பதவிகளைப் பெறுதல் ; அதற்கு மேற்பட்டது. வெளிவீட்டின்பமான முத்திநிலை என்பதுணர்க. தொழில் மூன்றாவன ஆக்கல், அளித்தல், அழித்தல். தொல்லோன்-ஆதியற்றபழம்பொருளா யிருப்பவன். ‘ முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம் பொருளே ’ என்றார் திருவாதவூரடிகள்.    

(7)

8. கண்ட கண்கள் புனல்பாயக்,
        களிப்பாய் உள்ளம் கரையழிய,
    விண்ட மொழியின் நாக்குழற,
        விம்மி மேனி மயிர்பொடிப்பப்,
    பண்டை வசம்போய்ப் பரவசமாய்ப்
        பரமா னந்தத் தெளிநறவம்
    உண்டு தெவிட்டா அருள்புரிந்தான்
        கருவை வாழும் உரவோனே.

    தரிசித்த கண்கள் ஆனந்த பாஷ்பஞ் சிந்தவும், ஆனந்தக் களிப்பிலழுந்தி மனம் வரம்பிகந் தோடவும், துதிக்கும் மொழியொடு நாத் தடுமாறவும், மேனி பூரித்துப் புளகரும்பவும், முன்னுள்ள தன் வசம்போய்ப் பரவசப்பட்டுச் சிவானந்தமாகிய தெளிந்த நறவினை வாய்மடுத்துத் தெவிட்டாதிருக்கத் திருக்கருவையில் வாழும் ஞான மூர்த்தி திருவருள் செய்தான்.

    புனல்-நீர். விள்ளுதல்-சொல்லுதல். பண்டை-பழைய. நறவம்-தேன், கள். உரம்-ஞானம்.