பக்கம் எண் :

14

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    மேற்செய்யுளில், ஞானமே திருவுருவான சிவபெருமான் தமக்கு அருள்புரிந்ததைக் கூறினார். அவ்வருளே சத்தியாகப் பாகத்தே அமரநின்ற உமாமகேஸ்வரத் திருக்கோலச் சிறப்பை ஈண்டுக் கூறினார். ஆன்மாக்களை அறியாமையினின்று நீக்கி முத்தியின்பத்திற் சேர்ப்பது சத்தியோடுகூடிய சிவமேயாம். இதனை,

    அருளது சத்தி யாகும் அரன்றனக்(கு); அருளை யின்றித்
    தெருள்சிவ மில்லை ; அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை ;
    மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் முத்தி
    இருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்.

என்னும் சிவஞானசித்தித் திருவாக்கு இனிது விளக்குதல் காண்க.

    வரதாஸ்தம் கீழமைந்த திருக்கரம்; அஃது அடியார் வேண்டிய தருளுவது. அபயாஸ்தம் மேலெடுத்த திருக்கரம்; அது சரணமடைந்தவரை அஞ்சலிரென்றருளுவது. மழுவேந்திய திருக்கரம் வலக்கரம்; மானேந்திய திருக்கரம் இடக்கரம். உரக ஆபணரம் - உரகாபரணம்; வரத அபயம்-வரதாபயம்: வடமொழியில் வந்த தீர்க்கசந்தி.                   

(9)

10. நின்ற நிலையும், செய்தொழிலும்,
        நினைத்த குறியும், வழிபாடும்,
    ஒன்று பதமும், பதங்கடந்த
        உண்மைப் பொருளும் அறியேனை
    இன்றும் அடியா ருடன்கூட
        எண்ணம் புரிந்த இனிய அருள்
    நன்று நன்று ! தமிழ்க்கருவை
        நம்பா! உம்பர் நாயகனே!

    செந்தமிழ் வழங்கும் திருக்கருவையி லெழுந்தருளிய இறைவனே! தேவர்களுக்குத் தலைவனே! யான் நிற்கின்ற நிலை இன்னதென்பதையும், (யான்) செய்கின்ற செயல்களையும், அவ்வச் செயல்களில் நின்று கருதும் மூர்த்தி