பக்கம் எண் :

16

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    இறைவனாகிய உருத்திரனும் திருமாலும் நூறு தளங்களையுடைய தாமரைப் பொகுட்டில் வசிக்கும் பிரமனும் என்று கூற நிகரின்றியிருக்கும் விசுத்ததேகமுடையவனாகிய, திருக்களா நிழலின்கண் எழுந்தருளியிருக்கின்ற, இறைவனுடைய இரண்டு திருவடிப் புகழ்ச்சியைக் கூறிப், பெரிய நிலவுலகிலுள்ளோர் (தம்மைப்) பெரிதும் புகழ(த்தக்க நா வன்மை சித்திக்குமாறு) வரம்பெற்ற, இனிய கவிதொடுக்கும் நாவல்லோர், மிகவும் உயர்ந்த விண்ணுலகில், கற்பக நீழலில் வசிக்கும் இந்திர செல்வத்தையும், வேண்டார்.

    நாயகன்-இறைவன், தலைவன். முகுந்தன்-திருமால். சததளப் பொகுட்டு-நூறு இதழ்களையுடைய தாமரை மலர்ப் பொகுட்டு : சதம்-நூறு ; தளம்-இதழ். தாமரைமலர் என்பது குறிப்பெச்சம். தூயவன்-பரிசுத்தன். துணை-இரண்டு. வழுத்தி-துதித்து. மாஇரும்-மிகவும் பெரிய. ஞாலம்-பூமி. சேய் இரு-மிகவும் உயர்ந்த. விசும்பு-வான்உலகு.

    உருத்திரனை நாயகன்என்றார் தலைமைதோன்ற. ‘தேன்முகம்’ என வரும் செய்யுட்டொடரில் தாயுமான சுவாமிகள்

    கண்டன அல்ல என்றே கழித்திடு மிறுதிக் கண்ணே
    கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி யத்தாற்
    பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன மாயை யோடே:
    வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன்

    விளங்கவெண் ணீறு பூசி விரிசடைக் கங்கை தாங்கித்
    துளங்குநன் னுதற்கண் தோன்றச் சுழல்வளி நெடுமூச் சாகக்
    களங்கமில் உருவந் தானே ககனமாய்ப் பொலியப் பூமி
    வளர்ந்ததாள் என்ன உள்ளம் மன்றென மறையொன் றின்றி