பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

17

    மறைமுழக் கொலிப்பத் தானே வரதமோ டபயக் கைகள்
    முறைமையின் ஓங்க நாதம் முரசெனக் கறங்க எங்கும்   
    குறைவிலா வணம்நி றைந்து கோதிலா நடனம் செய்வான்
    இறையவ னெனலாம் யார்க்கும் இதயசம் மதம்ஈ தல்லால்-

என்றருளிச்செய்த செய்யுட்கள் ஈண்டு நோக்கத்தக்கன.

    சதம் என்பது ஈண்டு எண் மிகுதியை உணர்த்தியது. ‘இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை-உயிர்வழி வவ்வும்’ உடம்படு மெய்யாதலே பொதுவிதியாயினும், மா என்பது உரிச்சொல்லாதலால் ‘இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும்’ என்னும் புறனடையால் ‘மாயிரு ஞாலம்’ என யகர உடம்படு மெய் பெற்றது. ஈற்றேகாரம் தேற்றம். (11)

12. வேண்டுவ தொன்று: தமியன், எப் பிறப்பும்
        வெந்தழல் நரகிடை விழினும்
    காண்டகு சிறப்பின் அரம்பையர் சூழக்
        கற்பக நீழல் வைகிடினும்,
    தூண்டரு சுடரே! களாநிழல் அமர்ந்த
        சோதியே! கருவைநா யகனே!
    ஆண்டகாய்! நினது திருவடிக் கமலத்(து)
        அன்பெனும் அழிவிலாப் பொருளே.

    தூண்டாத (தீபம்போலும் நின்று மலவிருளையோட்டும்) விளக்கே ! களாமரத்தின்கீழ் எழுந்தருளிய (ஞான) ஒளியே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே ! ஆண்தன்மையிற் சிறந்தவனே! ஒரு பற்றுக்கோ டில்லாத அடியேன் (நின்பால்) வேண்டுவ தொன்றுளது: (அது யாதென்னில்) எந்தப் பிறவி யெடுத்தாலும், கொடிய தீயமைந்த நரகத்தில் விழுந்தாலும், கண்டு மகிழத்தக்க சிறப்பு வாய்ந்த தெய்வப் பெண்கள் சூழ்ந்து நிற்கக் கற்பகநிழற் கீழ் (இன்பவாழ்க்கையில்) இருக்கப்பெற்றாலும்