பக்கம் எண் :

18

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

உனது திருவடித் தாமரையின்கீழ் வைக்கும் அன்பென்று சொல்லப்பட்ட அழிவில்லாத பொருளே.

    வெம்தழல்-கொடிய நெருப்பு. காண்தகு-காணத் தகுந்த சிறப்பு வாய்ந்த. ஆண்தகாய்-(ஆன்மகோடிகளை) ஆண்டருளும் பெருமை வாய்ந்தவனே; தகை-பெருமை.

    காண்+தகு=காண்டகு. ஆண்+தகாய்=ஆண்டகாய். ‘தூண்டகு சுடரே’ என்பதும் பாடம் ; இதற்கு ‘ஸ்தம்பவடிவமான பேரொளிப் பிழம்பே’ என்று பொருள் கூறுக. தூண்+தகு=தூண்டகு.

    தூண்டரிய சுடராவது தூண்ட வேண்டாது ஒளி வீசும் விளக்கு. அஃதாவது, தூண்டாத தீபம். இது மாணிக்கத்தைக் குறிக்கும். இல்பொருள்உவமை யாக்கினுமாம்.

    நினது திருவடிக்கு அன்பு பூண்டிருத்தலே பேரின்ப மாதலால் வான்புகினும் சரியே, நரகம்புகினும் சரியே, யான் வேண்டுவது அவ்வன்பே என்றார். ‘எரிவாய் நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறினே’ என்றார் திருவாதவூரடிகளும். அன்பை அழிவிலாப் பொருள் என்றார், அன்புஞ் சிவமும் ஒன்றென்பது பற்றி. ‘இறவாத இன்ப அன்பு வேண்டி’ என்றார் பிறரும். அன்பும் சிவமும் ஒன்றாதலை,

    அன்புஞ் சிவமு சிவமு மிரண்டென்ப ரறிவிலார்;
    அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்:
    அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின்,
    அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.

என்னுந் திருமந்திரத் திருவாக்கான் உணர்க.

    நிழலமர்ந்த சோதியே என்பதால் அருளோடு கூடிய சிவம் என்னும் குறிப்புப் பெறப்படுதல் காண்க.

(12)