பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

71

அரிது சுவைப்புலன்வழியே மனத்தைச் செலுத்தி உணவுகொள்ளும்போது        சிந்தித்தல்; அதனினும் அரிது ஐம்புலனையும் காம நுகர்ச்சியிற் செலுத்தி         மனமழிந்து நிற்கும்போது இறைவனைச் சிந்தித்தல்.  இங்ஙனம் ஒன்றினொன்று அருமையுடைத்தாதல் பற்றி அம்முறையே கூறினார்.  இவ்வாறு ‘எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்’ சிந்தையைச் சிவன்பாலே வைத்தல் அவனடிக் கன்பிலாதவழி இயலாதாகலின் ‘உன் திருவடிமீ தன்புடையேன்’     என்பது கருத்தாகக் கொள்க.  கொள்ளவே, ‘சிற்றின்பத்துழலும் சிறியனேனும் யான் நின் திருவடிசாரும் பேரின்பப் பேற்றுக்கு உரியனாவேன்’ என்றாராம்.  என்னை?  இறைவனடிக்கு இடையறாத அன்புடையார் எந்நிலையில் நின்றாரேனும் இறைவனடி சார்வர் என்பது நூல்களின் துணிபாதலால் என்க.  இக்கருத்தானே திருவெண்காட்டடிகளும்,

    காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
    ஒடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர்க் கோங்குவிண்ணோர்
    நாடே யிடைமரு தீசர்க்கு நல்லன்பர் நாரியர்பால்
    வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே

என்றருளிச் செய்தமை காண்க.                  

    ‘இருக்கினும்’ என்பதில் இன் என்பதைத் தவிர்வழிவந்த சாரியையாகக் கொள்க.

(62)

63. சிந்தனை உனக்குத் தந்தேன்,
        திருவருள் எனக்குத் தந்தாய்;
    வந்தனை உனக்குத் தந்தேன்,
        மலரடி எனக்குத் தந்தாய்;
    பைந் துணர் உனக்குத் தந்தேன்,
        பரகதி எனக்குத் தந்தாய்;
    கந்தனைப் பயந்த நாதா !
        கருவையி லிருக்குந் தேவே!