பக்கம் எண் :

40

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    சிவபெருமானுக்கு நடன அரங்கம் மயானமாதல்பற்றிக் ‘ கோயில் சுடுகாடு ’ என்றார் திருவாதவூரடிகளும். திசையினை ஆடையாக உடுத்திருத்தல்பற்றிச் சிவபெருமானுக்குத் திகம்பரன் என்பதும் ஒரு திருப்பெயராயிற்று; திக்குகளை அம்பரமாக உடையவன் : அம்பரமாவது ஆடை. சிவபிரானுக்குச் சூரியன் வலக்கண்ணும் சந்திரன் இடக் கண்ணும் அக்கினி நெற்றிக் கண்ணுமாம். இவை மூன்றும் உயிர்களுக்கு முறையே ஞானவிளக்கத்தினையும் திருவருட்பேற்றினையும் பாசநாசத்தினையும் சிவபெருமான் அளிக்கும் பெற்றியினை இனிது விளக்கும் குறிப்பின போலும்.

    இச் செய்யுளில் வஞ்சகப்புகழ்ச்சியணி பெறக் கிடப்பது காண்க.  

(30)

நான்காம் பத்து.

முதற்சீர் மாச்சீராகவும் மற்றைய மூன்றும்
பெரும்பாலும் விளச்சீர்களாகவும் வந்த

கலிவிருத்தம்.

31. எவ்வ முற்ற திரிமலம் இற்றது ;
        செவ்வி ஞானத் திருக்கண் திறந்தது ;
    கொவ்வை வாயுமை கொண்கன் கருவையான்
        பௌவ நஞ்சமுண் டான்கழல் பாடவே.

    கொவ்வைக் கனிபோன்ற இதழ்களையுடைய உமையம்மைக்குத் தலைவனும், திருக்கருவைப்பதியிலுள்ளவனும், கடலில் தோன்றிய நஞ்சினை அமுதாகக் கொண்டருளினவனும் ஆகிய இறைவனது திருவடியைப் புகழ்ந்துபாடக், குற்றம்பொருந்திய (ஆணவம் மாயை கன்மம் என்னும்) மூவகையான மலங்களும் ஒழிந்தன ; செம்மையான ஞானக்கண் திறந்தது.

    எவ்வம்-குற்றம். செவ்வி-செம்மை. கொண்கன்-கணவன். பௌவம்-கடல்.