பக்கம் எண் :

44

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

முடை நாற்றமுடைய கபாலங்களை மனமொப்பி மாலையாக அணிந்தவனாதலால், புலைக்குரும்பையென்று அருவருப்புக் கொள்ளாது என் உடம்பினும் புகுந்து என்னையாள்வான் என்றார்.

(34)

35. என்னை ஆள்பவன், என்னுள் இருப்பவன்,
        தன்னை யான்தொழத் தண்ணளி தந்தவன்;
    பொன்னை யாளும் புயன்தொழ நின்றவன்,
        கன்னி பாகன், கருவைக் கிறைவனே.

    திருமகளைத் தழுவும் புயத்தையுடைய திருமால் வணங்க நின்றவனும், உமையம்மையை இடப்பாகத்தில் உடையவனும், கருவாபுரிக்குத் தலைவனுமாகிய சிவபெருமானே என்னை அடிமைகொள்வோனும், என் இதய தாமரையில் வசிப்பவனுமாம் (உரிமையையுடைனாதலால்) தன்னை நான் வணங்கத் தண்ணிய கருணை செய்தோனாயினான்.

    தண் அளி-குளிர்ந்த அருள். பொன்-இலக்குமி. உலகுயிர்களை ஈன்றும் ஈனாதவளாய் என்று மழியா இளமையோடிருத்தலின் உமையம்மை கன்னி எனப்படுவாள். ‘ அகிலாண்ட கோடியீன்ற அன்னையே, பின்னையுங் கன்னியென மறைபேசும் ஆனந்தரூபமயிலே ’ என்றார் தாயுமான சுவாமிகளும்.

    சிவஞ்சத்தி தன்னை யீன்றும், சத்திதான் சிவத்தை யீன்றும்,
    உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும்
    பவன்பிரம சாரி யாகும்; பான்மொழி கன்னி யாகும்:
    தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே.

என்ற சிவஞான சித்தித் திருவாக்கில் உருவகமாக அறிவுறுத்தப் பட்ட உண்மை ஈண்டு உணரற்பாற்று.

    உயிர்களின் உள்ளத்து இடையறாது வீற்றிருப்பவனாதலால் ‘என்னுளிருப்பவன்’ என்றார். இக் கருத்தானே ‘ மலர்மிசை ஏகினான் ’ என்றார் ஆசிரியர் திருவள்ளுவநாயனாரும்.

(35)