பக்கம் எண் :

52

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    வாதனை-துன்பம். பந்தம்-பற்று. விழைவு-ஆசை. தலை மயங்கி-அறிவு மயங்கி. திகிரி-சக்கரம்.

    துன்பத்துக்கெல்லாம் மூலகாரணம் அறியாமைவடிவிற்றாகிய ஆணவமேயா தலாலும், ஆணவம், செம்பிற் களிம்புபோல ஆன்மாவை அனாதியே பற்றியுள்ள தாதலாலும், ‘ பழமையாம் வாதனை’ என்றார். பந்தமாவது பாசப்பற்று. பாசம் அனாதியே சீவனைப் பற்றியுள்ள தென்பதையும், சிவபெருமானே சீவனைப்     பாசத்தினின்று அகற்றித் தன் அடியிற் சேர்க்கவல்லவன் என்பதையும்,

    பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப் போல்பசு பாசம் அனாதி
    பதியினைச் சென்றணு காபசு பாசம் ;
    பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

எனப் போந்த திருமந்திரத் திருவாக்காற் கண்டு கொள்க. ‘வாதனை-வாசனை’ என்றலும் ஒன்று.      

(43)

44. ‘ கோமானே ! கருவைவரும்
        குணக்குன்றே ! மலரிதழித்
    தேமாலை புனைந்த சடைச்
        செழுஞ்சுடரே !’ என்றென்று
    பாமாலை வாய்பாடிக்
        கைகொட்டிப் பதம்பெயர்த்து
    நாமாட வம்மின்காள்
        தொண்டராய், நமரங்காள் !

    நம்மவர்களே ! ‘இறைவனே ! திருக்கருவையில் எழுந்தருளிய குணாதீத மலையே! தேன் பொருந்திய கொன்றை மலரால் தொடுத்த மாலையினைத் தரித்த சடாமுடியை யுடைய சிறந்த ஒளிப்பிழம்பே!’என்று (பலகாற் பலவாறு) சொல்லித் தோத்திரப் பாமாலைகள் பல வாயாற் பாடிக் கைபுடைத்தும், கால்பெயர்த்தும், நாம் ஆனந்தக் கூத்தாடுதற்குச் சிவபெருமானது அடியவராய் வாருங்கள்.