பக்கம் எண் :

78

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

உமையம்மையை இடப்பாகத்தில் வைத்துத் தமிழ் வழங்கும் திருக்கருவைப் பதியில்வாழும் இறைவன் எழுந்தருளி வந்து (என்னை) அடிமைகொண்ட செய்தி, நினைக்குந் தோறும் அதிசயத்தை விளைக்கும் வகையதாம்.

    உய்ய-கடைத்தேற.  உறுதி-பற்றுக்கோடு(உறு-பகுதி).  நாடா-நாடி (செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்).  வெய்ய-கொடிய.  ஆர்கலி-கடல்.  வெம்-கொடிய. உழக்கின்றேற்கு-வருந்துகின்றவனாகிய எனக்கு (உழக்கின்றேன்+கு எனத் தன்மை ஒருமை நிகழ்கால வினையாலணையும் பெயர் நான்காம் வேற்றுமை ஏற்று வந்தது.  உழ-பகுதி, கின்று-நிகழ்கால இடைநிலை, ஏன்-தன்மை ஒருமை விகுதி.  உழத்தல்-வருந்தல்).  ஆண்டுகொண்டது-எழுவாய்; ஆறு-பெயர்ப்பயனிலை.  ஆறு-வகை.

(68)

69. அதிசய முளத்திற் காட்டி
        அகம்புறந் தானாக் காட்டித்
    துதிசெயக் கவிநாக் காட்டித்
        தொடக்கறா நேயங் காட்டி
    மதியினிற் களிப்புங் காட்டி
        வந்தெனை யாண்டு கொண்டான்
    கதியென வுலகம் போற்றக்
        களாநிழ லமர்ந்த நாதன்.

    புகலிடம் என்று (அறிந்து) உலகு துதிக்கக் களா நிழலில் எழுந்தருளிய இறைவன், என் மனத்தில் அதிசயத்தைக் காட்டி, உள்ளும் புறம்பும் தானாகவே நிற்கும் நிலைமையைக் காட்டி, கவியால் துதிசெய்ய நாவைக்காட்டி, இடையறாத அன்பினைக் காட்டி, மனத்தில் ஆனந்தக் களிப்பையுங் காட்டி வந்து என்னை அடிமை கொண்டான்.