பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

99

நடக்கும் என்றது ஈண்டுப் பொதுவாய்த் தொழில் நிகழ்த்துவதைக் குறிக்கும் ; காலால் நடத்தல் ஒன்றையே யன்று.  ‘ நடிக்கும் என்பதும் பாடம்.  உடல் சூத்திரப் பாவைபோல் இயக்கப்படுதலை 38-ம் செய்யுளுரையிற் கண்டு தெளிக.  உழலல்-வருந்தல், சுழல்தல். கடத்தல்-சென்றொழிதல்.

    முன் நின்ற ஐகாரங்கள் ஐந்தும் அழிக்கப்படு பொருளில்வந்த இரண்டாம் வேற்றுமை யுருபு ; ஒன்று பலவடுக்காய் வந்தன. ஆளுவை-என்பதில் ஐகாரம் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; உகரம் சாரியை ; வகரவொறறு இடைநிலை.

    மாசறத் துலக்கி அழகுற வைத்துப் போற்றப்படும் உண்கலன் உணவிட்டு உண்டபிறகு எச்சிலென்று இழித்தொதுக்கப்படுதல் போல, உண்டியும் உடையும் அணியுஞ் சாந்தும் இட்டுப் போற்றப்படும் உடல் இருவினை நுகர்ச்சிக்கு இடமாகி அவ் வினை நுகரப் பட்டபிறகு இழித்தொதுக்கப்படுமாதலின் ‘ விளிந்தபின் தீண்டாத் துடக்கை ’ என்றார்.  பிறப்பை அஞ்சியே இறப்பை அஞ்சுவர் மெய்யுணர்வுபெற்ற ஞானிகள்.  ‘ யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் ’ என்றார் திருவாதவூரடிகள்.  காரைக்காலம்மையார் ‘ பிறவாமை வேண்டும் ; மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் ’ என்றார்.  ஆதலின், இவ்வுடலை ஒழிக்கத் துணிவது, பிறப்பறுத்து என்னை நீ ஆட்கொள்வாய் என்ற உறுதியாற்றான் என்பார் ‘ நீக்கி என்று ஆளுவை ’ என்றார்.

(87)

88. உத்தி வாளரா முடித்தபால்
        வண்ணனே ! உனது
    பத்தி வேண்டுவ தன்றியே
        நரகிடைப் படினும்
    முத்தி வேண்டிலேன்; துறக்கமும்
        வேண்டிலேன் முனிவர்;
    சித்தி வேண்டிலேன் ; வேண்டிலேன்
        திசாதிபர் சிறப்பே.