பக்கம் எண் :

ஆராய்ச்சி உரை5


ஆராய்ச்சி உரை

தூது நூல்

   செந்தமிழ்நாட் டிலக்கியங்களிற் சிற்றிலக்கியம் எனக் கூறப்படும் நூல்கள் பல;
கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, மடல், கோவை, பரணி, தூது முதலியன.
பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் போன்ற நூல்களில்
இவற்றிற்கு இலக்கணம் அமைந்துள்ளது. பெருங்காப்பியங்களிலும் காப்பியங்களிலும்
போர்க்குச் செல்லுமுன்னர்த் தூதுவிடுக்குஞ் செயல் ஒன்றுளது. அது தூது சொல்ல
வல்லவன் ஒருவனை விடுத்து வேற்றரசர்க்கு மாற்றரசர் தங்கருத்தை விளக்குவது.
இப்பொருளமைந்த பகுதி இராமாயணம், பாரதம், கந்தபுராணம் இவற்றிற் காணலாம்.
அது குறித்துச் செல்லுந் தூதுவர்க்குரிய இலக்கணம் திருவள்ளுவர் ஒற்றாடல், தூது
என்ற அதிகாரங்களிற் கூறியுள்ளார். தூது என்ற தனி நூல்களிற் காதல் கொண்ட
தலைவியொருத்தி, தன் காதலன்பால் தனக்கு விருப்பமான ஒரு பொருளைச்
சிறப்பித்துக் கூறித் தூது விடுத்ததாகப் பொருள் அமைந்திருக்கும். அப்பொருள் தூது
சொல்லி வரும் பொருளாக இருக்க வேண்டும் என்பது இலக்கணமன்று. அஃறிணைப்
பொருள்களையே விடுத்ததாகத் தூது நூல்கள் யாவும் அமைந்திருக்கின்றன.
உயர்திணைப்பொருளை விடுத்த பொருளமைந்த நூல் ஒன்றும் இன்று. விறலிவிடு தூது
என்பது உயர்திணைப் பொருளைத் தூது விடுத்ததாகப் பொருளமைந்துள்ளது.
பொருளும் வேறாக அமைந்துள்ளது. காதல் குறித்த தூது அன்று அது.
   இலக்கண விளக்கம் என்னும் நூலில் "பயிறருங் கலி வெண்பாவினாலே,
உயர்திணைப் பொருளையு மஃறிணைப் பொருளையும், சந்தியின் விடுத்தன் முந்துறு
தூதெனப், பாட்டியற் புலவர் காட்டினர் தெளிந்தே" எனத் தூதுக்கிலக்கணம்
சொல்லப்பட்டது. இதனால் உயர்