பக்கம் எண் :

6அழகர் கிள்ளைவிடு தூது


திணைப்பொருளையும் தூது விடுப்பது இயற்கையெனத் தெரிகிறது. பிரபந்தத்திரட்டு
என்னும் நூலில் "எகினமயில் கிள்ளை யெழிலியொடு பூவை, சகிகுயினெஞ் சந்தென்றல்
வண்டு-தொகைபத்தை, வேறுவேறாப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன்,
பூறிவா வென்ற றூது" எனத்தூதுக்குரிய பொருள்கள் பத்தெனத் தொகை
கொடுத்துள்ளார். அப்பத்தில் சகி என்பதும் ஒன்று. சகி-பாங்கி; தோழி. தோழியும்
தூதுக்குரியவள் எனத் தோன்றுகிறது. இரத்தினச் சுருக்கம் என்னும் நூலிலும்
"இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை, பயம்பெறுமே கம்பூவை பாங்கி -
நயந்த குயில், பேதைநெஞ் சந்தென்றல் பிரமரமீ ரைந்துமே, தூதுரைத்து
வாங்குந் தொடை" எனப் பத்துப்பொருள்கள் பகர்ந்தனர். பாங்கி இப்பாவிலும்
வந்துள்ளாள். பாங்கி தான் சென்று தூதுரைத்துத் தொடை வாங்கி வரும்
பான்மையுடையவள். இலக்கண விளக்க நூலாசிரியர் "உயர்திணைப் பொருளையும்"
என உரைத்தது பாங்கியைக் கருதித்தான் எனத் துணியலாம். காதல் கொண்ட
தலைவிக்குத் தூதுசென்று காதலன்கருத்தறிந்து வருவது ஆருயிர்ப் பாங்கிக்கே யமைந்த
செயலாம். வேறொருவர் இச்செயலை மேற்கொள்ளார் என்பது வெள்ளிடை. இதுகாறும்
பாடிய நூல்களிற் 'பாங்கி தூது" என்ற பெயரமைந்த நூல் ஒன்று கண்டிலம். மயில்,
பூவை, குயில் என்பவை முன் நின்ற தூது நூலும் இதுகாறும் பாடாது மறந்தனர்போலும்.
 
   மேற்கூறிய பத்துப்பொருள்களை விடுத்து வேறு பொருள்களையும் வேறு பொருள்
குறித்துத் தூது விடுத்த பொருளமைந்த நூல்கள் பலவுள்ளன. பணவிடு தூது, தமிழ்விடு
தூது, மான்விடு தூது, வனசவிடு தூது, சவ்வாது விடு தூது, நெல்விடு தூது,
புகையிலைவிடு தூது என்பன அவற்றின் பெயர்கள். மிதிலைப்பட்டிக் கவிராயர் ஒருவர்
தம் பகைவனாகிய ஒருவன்மீது வசையாகப் பாடிய "கழுதை விடு தூது" ஒன்றுள்ளது
கண்டேன்" என டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் குறித்திருக்கின்றனர்.
செருப்பு