6, 7 : வகை வகையாய் எவ்வண்ணமாய்ப் ........அடங்குமே (சொ - ள்.) பலவகையாய் எத்தனை விதமாகப் பறக்கின்ற எப்பறவையாயினும் உன் ஐந்து வகையான நிறங்களில் ஒன்றாகத்தானே அடங்கும் (வேறு நிறம் அவற்றிற்கு உண்டோ)? (வி - ம்.) ஐ வண்ணம் : வெள்ளை சிவப்பு, கருமை, மஞ்சள், பச்சை என்பன. இவ்வைந்து நிறமும் உனக்கமைந்து இருப்பதால் பறவைகள் எல்லாம் உனக்குள் அடக்கமாம் என்று அதன் சிறப்புக் கூறினர் எனக் கொள்க. 7, 8 : மெய்வண்ணம் ........சிவந்தாய் மொழிந்திடாய் ! (சொ - ள்.) நின் உடல் நிறத்தைப் பார்த்தபோது உமையவள் என்று சொல்வார் என்று நீ நினைத்தோ, மூக்கு மட்டும் சிவப்பாக அமைத்துக்கொண்டாய் சொல்வாயாக. (வி - ம்.) பார்ப்பதி ஒரு பெருந்தெய்வம் ; அவளைப்போல நாம் இருத்தல் தகுதியன்று என்று நினைத்து மூக்கைமட்டும் சிவப்பாக மாற்றியிருப்பதுபோலத் தோன்றுகிறது. பணிவும் அடக்கமும் உடையை என்பதற்கு இஃது ஓர் அறிகுறி என அதன் பெருமை கூறினர். 8, 9 : நாக்குத் தடுமாறுவோரை .......விள்ளாய் (சொ - ள்.) நாக்குத் தடுமாறிப் பேசுவோரை (உளறு வாயரை) யெல்லாம் மக்கள்தம் பக்கம் இருத்தாது தள்ளி விடுவர் (நீயும் அத்தகைய பேச்சுப் பேசினும்) உன்னைத் தள்ளி விடுவார் ஒருவர் உளரோ? நீயே சொல்வாய். (வி - ம்.) உளறு வாயராய்த் திருத்தமில்லாமற் பேசுவோரைக் கண்டால் "நீ பேசுவது ஒன்றும் பொருள் விளங்கவில்லை போ வெளியே" என்று வெறுத்துப் பேசுவது மாந்தர் இயற்கை. இவ்வாறிருக்க நீ பேசுவதும் திருந்தாத சொல்லாயினும், அதனைக் கேட்க எவரும் விரும்புகின்றனரே ! எத்துணை இனிமை உன் சொல்லில் இருக்கிறது ! என அதன் பெருமை விளக்கியது இது. | | |
|
|