பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

20

6

6. பேய்களைப் பாடியது

        குவளைமலர்ந் தனையவிழிக்
            கோமளத்தின் வடிவுஇது, மற்று
        அவளை மருங்கு அகலாத
            அலகைகளை இனிப்பகர்வாம்.                 

        (115)

        தோலும் என்பும் நரம்பும் அல்லால் இடை
            சொல்ல லாம்தசை இல்லா உடம்பின;
        காலும் கையும் நிறமும்எல் லாம்முழுக்
            கங்கு லால்இரு கப்புவிட் டொப்பன.               

        (116)

        விற்கள் போல வளைந்த புறத்தன;
            விழியி ரண்டும் வெறுங்குழி ஒப்பன;
        பற்கள் நீண்டு மறைந்த உதட்டின;
            பாழி பட்ட பெரும்பகு வாயின.                 

(117)

        காதங்காதரை நீண்ட கழுத்தின;
            கட்செவிக்குஇடம் காட்டும் செவியின;
        ஊதும் காற்றி னுடனே பறப்பன;
            உண்டி யென்பன கண்டறி யாதன.              

(118)    

    ‘காதம் காது அரை நீண்ட கழுத்தின’: காது ஒரு காதம் நீண்டது; கழுத்து அரைக் காதம்.

        கொழுந்துஉறப்புகை போல உயிர்த்தலில்
            கொல்லன் ஊதுலை ஒப்பன; மெல்லவே
        எழுந்து நிற்பின், விசும்பினில் முட்டியே
            இடம்பெ றாமல் முடங்கி யிருப்பன.            

(119)

        தம்முகம்சுளிக் கின்ற தரத்தினால்,
            தங்களைக்கொடு தாங்கள் கரத்தலால்,
        எம்ம தென்றுஎப் பொருளும் கரத்தலால்
            ஏற்றவர்க்கு ஒன்று இடாதவர் ஒப்பன.      
      

(120)

    முகம்  சுளித்தலும்,   தாமே  ஒளிந்து  கொள்வதும்,   எப்பொருளையும் தம்முடையது எனக் கரத்தலும் உலோபிகள் இயல்பு.

        பற்றினாரை விடாமையி னால், அழும்
            பண்பினால், தொழும் பாவனையால், உடல்
        விற்றலால், செய் வஞ்சனையால், பெறு
            வாசியால், வரும் வேசையர் ஒப்பன.             

(121)

    பற்றினாரைப் பொருள்  உள்ளளவும்  விடாமையும்,  வேண்டுவன அழுது கேட்டலும், தொழுவது போல நடிப்பதும், தம் உடலை விற்பதும், வஞ்சனையும், தரகு பெறலும் வேசையர் இயல்பு.