பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

4

New Page 1

சேனைமுதல் நாதர்

        ஏனைஅசு ரேசன் மாளவிளை யாடும்
            ஏவலின்ம றாத காவல்சூழ்
        சேனைமுதல் நாதர் வேதம்ஒரு நாலு
            தேடும்இரு தாள்கள் பாடுவாம்:                

(15)

    பெருமாள் கொடுமையே உரு ஆகிய அசுரனுடன் போர்புரியச் சென்ற போது, அவருடைய ஆணையை மறுக்காது, திரு வைகுண்டத்துக்குக் காவலாகச் சேனைமுதலியார் இருந்தார். வேதங்கள் தேடும் அவருடைய பாதங்களைப் பாடுவோம்.

        மாகனக பீட மாளிகைவி டாத
            மாதுபிரி யாது வாழ்வதோர்
        கோகனக வாவி, நாகணையின் மேவு
            கோயில்இனி துஊழி வாழவே.                

(16)

    ‘கோகனக வாவி’: திருமாலுக்கு உவம ஆகுபெயர். ‘தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே’ ( திருவாய் மொழி ).

கலைமடந்தை

        அருண பங்கயம் திகழ்கை; கண்கருங்
            குவளை; வெண்பளிங்கு அனையள் என்றலும்,
        கருணை யும்பெருங் கவிதை யும்தரும்
            கலைம டந்தைதன் கழல்வ ணங்குவாம்:             

(17)

        மருதுஒ டிந்து, சந்து அடிப றிந்து, வண்
            டலைஅ டர்ந்து, தண் டலைஅ டங்கலும்
        பொருதுஎ றிந்துஎறிந்து, எழுத ரங்கநன்
            புனல்அ ரங்கர்வண் புகழ்வி ளங்கவே.      
     

(18)

    ‘கொண்டல் குமுறும் குடகு இழிந்து, மதகு உந்தி, அகில் கொண்டு, நுரை மண்டி வரு நீர்’ ( திருவரங்கக் கலம்பகம் )

கொற்றவை

        மலையார்புய மயிடாசுரன்
            மறவாள்அம ரிடையே
        தலையாசனம் இடுநாள், பகை
            தணிவாள்கழல் பணிவாம்:                       

(19)

    ‘தலை ஆசனம்’: தலைகளை வீற்றிருக்கும் இடமாகக் கொண்டு, ‘பகை தணிவாள்’: சினம் ஆறிய கொற்றவை.