பக்கம் எண் :

கடை திறப்பு19


     (வி-ம்.) வேகம்  விளைய-விரைவு  மிகுதிப்பட,  கொழுநர்-கணவர்.
மேனி-உடல்.  சிவந்தது  புணர்ச்சி  விழைவால்  என்க.  போகம்-கலவி .
விளைய - அதன்  பயனாய்  உண்டாக.  நகை - சிரிப்பு. நகைபோகத்தை
விளைத்த தென்க. புனை-அழகுபடுத்தப்பட்ட.                     (25)

துயிலெழுந்த நிலைகூறி விளித்தது

46. சொருகு கொந்தளகம் ஒருகை மேலலைய
     ஒருகை கீழலைசெய் துகிலொடே
திருவ னந்தலினும் முகம லர்ந்துவரு
   தெரிவை மீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி.)ஒரு  கை  மேல்,  அளகம்  அலைய,  ஒரு  கை  கீழ்,
துகிலொடே, அனந்தலினும் முகமலர்ந்துவரு தெரிவைமீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) சொருகு-முடிக்கப்படுகின்ற. கொந்து-பூங்கொத்து.  அளகம்-
கூந்தல்.  அலைசெய் - அலைபோல்  மடிந்து மடிந்து தோன்றும். துகில்-
உடை. அனந்தல் - தூங்கியெழுந்த  மயக்க நிலையிலும். தெரிவை-பெண்.
தூக்கம் தெளிந்ததும் ஒரு கை  மேலே கூந்தலைத் தாங்க, ஒரு கை கீழே
துகிலைத்   தாங்கி   எழுந்து   வந்தனர்   என்க.   இத்  தாழிசையின்
முதலடியிலமைந்துள்ள  கருத்து 'அகிலேந்து கூந்தல்,  ஒரு கையில் ஏந்தி
அசைந்தொரு  கை  துகிலேந்தி '  எனத்  தஞ்சைவாணன் கோவையினும்
வருதல் காண்க.                                            (26)

நகக்குறி கண்டு களித்தமை கூறி விளித்தது

47. முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
     முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
   கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின.்

     (பொ-நி) யாரேனும்  இல்லா இடத்தே, கலை நீவி, முலைமீது நகம்
மேவு குறியை, கண்ணுற்று, களிப்பீர்கள் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) கொழுநர்  - கணவர்.  முன்  செல்வம்  இல்லாத  அவர்-
இதற்குமுன் பொருள் இல்லாதவர்; வறிஞர். பொருள்-செல்வம். யார்ஏனும் -
ஒருவராவது,  கலை - மேலாடை. நீவி - விலக்கி.  இவ்வாறு கண்ணுறுதல்
கலவி நிலையை நினைந்து மகிழ்தற்கென்க.                       (27)