(இ - ள்.) நாட்டின்கண் வாழ்வை
துறந்துபோய் - தன் நாட்டில் இன்பத்தோடு வாழ்ந்து
வந்து சிறந்த வாழ்க்கையை விட்டுவிட்டுப்போய்,
நால்மறையோர் ஈட்டங்கள் சூழ காட்டில் இருந்தானை
- நால்வகை வேதத்தின் விழுமிய பொருளைக்
கற்றுணர்ந்த முனிவர் கூட்டங்கள் சூழ்ந்திருக்க
வனத்திலுறைந்தவனான, பெரும் தகையை-பெரிய சிறப்பு
வாய்ந்த தரும ராசனை, பேர் எழில் தோள் வேந்தர்
வரும் தகையர் எல்லாரும் - பேரழகு வாய்ந்த
தோள்களையுடைய அரசர்களுள் வருதற்கு ஏற்ற
தகுதியுடையார் எல்லோரும், வந்து கண்டார்கள் -
அங்கு வந்து கண்டார்கள்.
(க - து.) வருவதற்கிசைந்த
மன்னர்கள் யாவரும் காட்டில் தருமனை வந்து
பார்த்தார்கள்.
(வி - ரை.) ஈட்டம் - கூட்டம்.
இருந்தானை - இருந்தவனான தருமனை. இது இறந்தகால
வினையாலணையும் பெயர். ஐ - தலைவன் எனப் பொருள்
கொள்ளலுமாம். ‘வரும் தகையர் வேந்தர்
எல்லோரும் வந்து பெருந்தகையைக் காட்டிற்
கண்டார்கள்’ எனக் கூட்டி வினைமுடிபு செய்க.
பெருந்தகை : பெரிதாகிய தகுதியுடையவன் எனப்
பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த
அன்மொழித் தொகை. (2)
காட்டில் தருமராசனை வேதவியாசர் வந்து
காணல்
10. கொற்றவேல் தானைக் குருநாடன்
பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க - முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி.
(இ - ள்.) எற்றுநீர் ஞாலத்து இருள்
நீங்க - மோதுகின்ற அலைகளையுடைய கடல்சூழ்ந்த
இவ்வுலகின் (அறியாமையாகிய) இருள் நீங்கும்
பொருட்டாக, வழிமுறை முற்றும் வந்த - ஆசிரியர்
மாணாக்கரின் வழிவழியாகக் கேள்விமுறை கற்றல்
முறையாக முழுதும் வந்து, மறை எல்லாம் தந்தான் -
நால்வகை மறைகளையும் தன் மாணவர்க்குக்
கற்பித்தவனும் மொழிமுறையே கோத்த முனி - அம்
மறைப்பொருளைப் புராணமுறையில்
ஒழுங்குபடுத்தியவனுமான வேதவியாச முனிவன்,
கொற்றவேல் தானை குரு நாடன் பால் அணைந்தான் -
வெற்றிவேலேந்திய படைகளையுடைய குருநாட்டுக்
குரியவனான தருமராசனிடத்திற்கு வந்தான்.
|