பக்கம் எண் :

மூலமும் உரையும்17

(இ - ள்.) மாமறையால் உள்ளம் திருந்தி - பெருமை பொருந்திய வேதத்தினால் மனச்செம்மைபெற்று, அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து - (யாவராலும்) விரும்புதலையுடைய உண்மைத் தவவலிமை பெற்ற வியாசமுனிவர் ஆராய்ந்து, மெய் திரு வந்து உற்றாலும் வெம் துயர் வந்து உற்றாலும் - (தருமனை நோக்கி) நிலைபெற்ற செல்வங்கள் வந்து சேரினும் கொடுமையாகிய வறுமைத் துன்பம் முதலியன வந்து சேரினும், ஒத்து இருக்கும் உள்ளத்து உரவோனே - விருப்பு வெறுப்பின்றி ஒரு நிலைப்பெற்ற மனப்பண்புடைய அறிஞனே ! சித்தம் வருந்தியவா என் என்றான் - நீ மனக் கலக்கமுற்றிருப்பதற்குரிய காரணம் என்னவென்று கேட்டான்.

(க - து.) வியாசர், தருமனைப் பார்த்து, ‘நீ மனம் வருந்தியிருப்பதற்குக் காரணமென்ன ?’ என்று கேட்டார்.

(வி - ரை.) மெய்த்திரு - உண்மையான செல்வம் : கல்விப்பொருள், செல்வப் பொருள்களைக் குறிக்கும். ஆனால், வெந்துயர் என்று பின்வருவதால் ஈண்டுப் பொருட்செல்வத்தையே குறித்து நின்றது. கல்விப்பொருள் அழிதலும் சிதைதலும் இல்லா விழுப்பொருள். செல்வம் செல்வதும் வருவதுமாகிய நிலை பேறில்லாதது. ஆதலால், செல்வம் பெறினும் வறுமைவரினும் கலங்காத திண்மையுள்ளம் பெற்றவன் என்பாராய் ‘உள்ளத்து உரவோன்’ என்றார். துயர் - எல்லாத் துன்பத்தையும் ஒருங்கே தரவல்லது வறுமை யாதலின், இதற்கு வறுமையென்று பொருள் கூறப்பெற்றது. என்னை ?

1‘இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது’

என்பது திருவள்ளுவர் திருமொழி யாகலான் என்க.

ஆறு - ஆ எனக் கடைக் குறைந்து நின்றது. மெய்த்தவம் - உண்மையான தவம். அது தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக இருக்கும் மெய்ம்மைநெறி. வேதவியாசர் பிறர்க்கென வாழ்ந்து உலகத்துக்கு வேண்டும் நலஞ்செய்ய வேதத்தை முறைப்படுத்தினாராகலான் இவ்வாறு, ‘மெய்த் தவத்தோன்’ என்றார். (5)

தருமன் தான் மனம் வருந்தியதற்குக் காரணம் உரைத்தல்

13. அம்பொற் கயிலைக்கே ஆகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா - எம்பியைமுன்
போக்கினேன் என்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினேர் இல்லாத மன்.

1. திருக் : 1041.
ந. - 2