(இ - ள்.) பூதலத்தும் மீதலத்தும்
வாக்கில் நேர் இல்லாத மன் - மண்ணுலகினும்
விண்ணுலகினும் வாய்மையே உரைப்பதில் தனக்கு
யாரும் ஒப்பில்லாத தருமராசன், அம் பொன்
கயிலைக்கே - அழகிய வெள்ளிமலையில் எழுந்தருளி
யிருக்கின்ற, ஆகத்து அரவு அணிவார்தம்
பொன்படைக்கு - மார்பில் பாம்பை அணியாகப் பூண்ட
சிவபெருமானின் பொன்னொளியுள்ள பாசுபதாத்திரப்
படையைப் பெற்றுக்கொண்டு வருமாறு, தமியன் ஆ -
தன்னந்தனியனாக, எம்பியை முன் போக்கினேன்
என்று உரைத்தான் - என் தம்பியாகிய (அருச்சுனனை
நெடுநாட்களுக்கு) முன்பாகவே செல்ல விடுத்தேன்
என்றான்.
(க - து.) ‘பாசுபதாத்திரப் படை
பெறுதற்கு அருச்சுனனைக் கைலைமலையில்
எழுந்தருளியுள்ள சிவபெருமான்பால் அனுப்பி
நெடுநாட்கள் ஆயின’ என்று தருமன் கூறினான்.
(வி - ரை.) ‘பொன் கயிலை’ என்பது
ஈண்டு வெண்பொன்னாகிய வெள்ளியைக் குறித்தது.
ஒன்றொழி பொதுச்சொல். பொன்படை - அழகிய படை
என்றலுமாம். ‘ஆக’ என்பதன் ஈற்றுக் ‘ககர
உயிர்மெய்’ கெட்டு ‘ஆ’ என வந்தது விகாரம். மன்
- நிலைபேறுடையவன் என்பது பொருள். (6)
‘ அருச்சுனன் மிக்க தோள்வலியுடையான்
’ என்று
வியாசர் கூறல்
14. காண்டா வனம்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு - மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டும் அன்றோ துணை.
(இ - ள்.) காண்டா வனம் தீ கடவுள்
உ(ண்)ண - காண்டாவனத்தைத் தீக்கடவுள் (அக்கினி
பகவான்) எரித்துக் கொளுத்துமாறு, கைகணையால்
நீண்ட முகில் தடுத்து நின்றான்கு -
தன்கையம்புகளினால் விரிந்து மூடிய மேகங்களை
(மழைபெய்ய வொண்ணாமல்) தடுத்து வெற்றியுற்று வந்த
அருச்சுனனுக்க, அமரர் மீண்டும் தாள் இரண்டும் நோவ
தனி தனியே ஓடிய நாள் - தேவர்கள் புறமுதுகுகாட்டி
தம்தம் கால்கள் இரண்டும் நோவும் வண்ணம்
தனித்தனியாகப் பிரிவுபட்டு ஓட்டமெடுத்தபோது,
தோள் இரண்டும் அன்றோ துணை - அவனுக்குத் தன்
தோள்கள் இரண்டுமன்றோ உதவியாக இருந்தன?
(ஆதலால் அத்தகையானைக் குறித்து நீ
வருந்தவேண்டா.)
|