பக்கம் எண் :

20நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

வியாசர், சூதாடுதல் அரசர்க்கு இயல்பே எனல்

16. கேடில் விழுச்செல்வம் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண் - வாடிக்
கலங்கலைநீ என்றுரைத்தான் காமருவு நாடற்
கலங்கலைநூல் மார்பன் எடுத்து.

(இ - ள்.) காமருவு நாடற்கு - சோலைகள் நிறைந்த குருநாட்டு வேந்தனான தருமனுக்கு, இலங்கு அலைநூல் மார்பன் - வெண்மைநிறம் பொருந்திய அசைகின்ற பூணூல் அணிந்த திரு மார்பினரான வியாசர், கேடுஇல் விழுச்செல்வம் கேடு எய்து சூது ஆடல் - என்றும் அழிவற்ற பெருஞ் செல்வமும் அழிந்து போகுமாறு சூதாடுதல், ஏடு அவிழ்தார் மன்னர்க்கு இயல்பே - இதழ்விரிந்த மலர்மாலை யணிந்த அரசர்கட்கு இயற்கையேயாகும்; வாடி கலங்கலைநீ - நீ அதற்காக வருந்தி உடல் மெலிவடையாதே என்று, எடுத்து உரைத்தான் - காரணங்காட்டிக் கூறினான்.

(க - து.) ‘சூதாடுதல் அரசர்கள் இயல்பே. ஆதலால், நீ அதற்கு வருந்தாதே’ என்று வியாசர் தருமனுக்குத் தேறுதல்மொழி கூறினார்.

(வி - ரை.) 1‘ கேடுஇல் விழு செல்வம்’ கொடுக்கக் கொடுக்கக் குறையாப் பெருஞ் செல்வம். அச் செல்வம் பிற எதனாலும் அழியாது. சூதால் அழியும் என்பாராய் ‘கேடெய்து சூதாடல்’ என்றார். காண் - அசைநிலை. அல்லது ‘நீ அறிந்துகொள்’ என்று கூறலுமாம். (9)

தருமன், ‘என்னைப்போல் காட்டில் வாழ்ந்தோருண்டோ ?’
என்று வினவல்

17. கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.

(இ - ள்.) விண் இழந்த மின்போலும் நூல் மார்ப - மேகத்தினின்றும் வெளித்தோன்றிய மின்னலைப் போன்ற பூணூலணிந்த மார்புடையானே, கண் இழந்து மாயம் கவறு ஆடி - (அறிவாகிய)

1. திருக் : 400-ல் இச் சொல்தொடர் வருத லறிக.