பக்கம் எண் :

மூலமும் உரையும்211

2. கலிதொடர் காண்டம்

திருமால் காப்பு

179. முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.

(இ - ள்.) நந்தும் புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும் - (முதலையிடத் தகப்பட்டுக்கொண்டு) வருந்திய யானைக்கும் தம்மிடம் அன்புபூண்ட இடையர்குலப் பெண்களுக்கும், அழைக்கைக்கு முன்செல் அடி - (காப்பதற்கும், தழுவுவதற்கும் அவர்கள் அழைத்தபோது) முன்னே சென்ற (திருமாலின்) திருவடிகளானவை, முந்தை மறைநூல் முடி எனல் ஆம் - பழைமையான வேதநூலின் தலைமையிடம் என்று கூறலாம், தண் குருகூர் செந்தமிழ் வேத சிரம் எனல்ஆம் - குளிர்ச்சி மிக்க குருகூரராகிய நம்மாழ்வார் அருளிய செந்தமிழ்மொழியானியன்ற திருவாய்மொழி வேதத்தினது முடி என்று கூறலாம். (அவ்வடிகளை வணங்குவோம்; அவை நமக்கு அருள்புரிதல் வேண்டி.)

(க - து,) யானை முன்னும் அன்புடைய இடைக் குலப் பெண்களின் முன்னும் அழைத்தற்கு முன்பு சென்று நின்ற திருமாலின் திருவடிகளைப் பழமறையின் முதன்மையெனலாம்; அன்றிச் செந்தமிழ் மறையின் முடியென்று கூறலாம், (அவைகளை வணங்குவோம்) என்பதாம்.

(வி - ரை.) முந்தை - பழைமை. மறை - வேதம். முதன் முதல் தோன்றிய நான்மறை. நுண்ணிய பொருள்களை உள்ளடக்கிக்கொண்ட காரணத்தால் மறையெனப் பெயர் பெறலாயிற்று. மறை என்பது ஆகுபெயர். திருமாலின் திருவடிகள் பழைமையான தமிழ் நான்மறைகட்கு முதன்மையானது; பின் தோன்றிய நம் மாழ்வார் அருளிய செந்தமிழ்ப் பாவானியன்ற மறைக்கும் அவ்வடிகள் முதன்மையாக அமைந்தன. முதலைவாய்ப்பட்டுத் தப்பிப் பிழைக்க வழிகாணாது தத்தளித்து வருந்தி ‘முதற்பொருளே!’