(க - து.) செஞ்சடைமேற் கங்கையைக்
கொண்டோனும், வெள்ளிமலையை யுடையவனும், அடியார்
நெஞ்சை விட்டு அகலாதவனுமாகிய சிவபெருமான் நமக்கு
என்றும் பாதுகாப்பாக இருக்கின்றான்; (அவனை
வணங்குவோம்) என்பதாம்.
(வி - ரை.) செக்கர் வான் -
செந்நிறம் பொருந்திய மாலைக் காலவானம்.
சிவபெருமான் சடை செந்நிறம் பொருந்தியது. அதில்
கங்கையை வைத்துள்ளான் என்பது அவன் அடையாளங்
குறிக்கும் புராண மரபு. செந்நிறச் சடையிலிருந்து
வெண்ணிற நீர்பாய்ந்தோடுவது செவ்வானத்தில்
தோன்றி யெறிக்கின்ற நிலவின் ஒளி
போன்றுள்ளதாகக் குறித்தார்: பண்புவமை. வெள்ளி
நெடுங்கிரி - திருக்கைலாயமலை. இறைவன்
திருக்கைலாயத்தில் வீற்றிருக்கின்றானென்பது.
இதன் உட்கருத்து, இறைவன் அடியும்முடியும் மெய்யறிவு
வடிவமே என்பதற்குப் புனைவாகக் கூறியதென்க. என்னை?
நீரின் வெண்மை, வெள்ளிமலையின் வெண்மை இவைகள்
குறிப்பனவாம். உலகத்தில் வாழும் உயிர்கட்கு
நீரே முதன்மை. நீரின்றி ஓரறிவுயிர்களான
புற்புண்டு செடி கொடி மரம் முதலியனவும் உயிர்வாழ
முடியா. உலகைக் காத்தும் படைத்தும் கரந்தும்
அலகிலா விளையாடல் புரிபவனாகிய ஆண்டவன்
அருள்நோக்கத்தால் உயிர்கட்கு நீரையருளி,
அதனால் உணவையும் பிற எலலாப் பொருள்களையும்
வளர்த்துக் கொடுக்கின்றா னென்பதற்காகவே, ‘வெள்ளத்தான்’
என்ற பெயராற் கூறினாரென்க. வெள்ளிமலை-பனிமலை.
அது வெண்ணிறமுடையதாகலான் அப்பெயராற் கூறினார்.
அது உருகி நீராக ஓடி உலகைப் புரத்தலால் அதையும்
உடையானென அவன்றன் அருளிரக்கத்தைச்
சுட்டியவாறாயிற்று. ஆகவே, அத்தகைய பெருமான்
நம்மைக் காப்பான் என்னும் கருத்தை உட்கொண்டு ‘எங்கட்கு
உளன்’ அவனை வணஙகுவோமெனக் குறிப்பால்
குறித்தாரென்க. (2)
நளன், தமயந்தியுடன் தன் நகர்க்குச்
செல்லுதல்
181. தவளத் தனிக்குடையின் வெண்ணிழலும் தையல்
குவளைக் கருநிழலும் கொள்ளப் - பவளக்
கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரில் ஏறினான் சென்று.
(இ - ள்.) பவளக் கொழுந்து ஏறி-பவளக்கொடிகள்
படர்ந்து மேலே சென்று, செம்நெல் குலைசாய்க்கும்
நாடன் -
|