பக்கம் எண் :

மூலமும் உரையும்421

3. கலிநீங்கு காண்டம்

திருமால் காப்பு

334. மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காதலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை
முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப
வந்தருளும் செந்தா மரை.

(இ - ள்.) மால்யானை - கசேந்திரன் என்னும் பெரிய யானையானது, முந்து அருளும் வேத முதலே என அழைப்ப - (அடியார்கள் வேண்டும்) முன்பே அவர்கட்குத் திருவருள் செய்கின்ற மறைக்கு முதற் காரணமானவனே ! என்று கூப்பிட்டபோது, வந்து அருளும் செம் தாமரை - ஏரிக் கரையில் நடந்து வந்து நின்ற சிவந்த தாமரை மலர்போன்ற (திருமாலின்) திருவடிகளை, மூலம் பழமறைக்கு முன்னேயும் காணல் ஆம் - முதல் நூலாகிய வேதத்துக்கு முன் வரிசையிலும் பார்க்கலாம், காலிக்கு பின்னேயும் காணல் ஆம் - ஆனிரைகளுக்குப் பின் வரிசையிலும் பார்க்கலாம். (எனவே அத்தகைய திருவடிகளை வணங்குவோமாக.)

(க - து.) கசேந்திரனென்னும் பெரிய யானைக்கு வந்து அருள் செய்த திருமாலின் திருவடிகளை வேதங்களின் முன் வரிசையிலும் பார்க்கலாம் ; பசுங்கூட்டங்களின் பின் வரிசையிலும் பார்க்கலாம் ; எனவே, அத்திருவடிகளை நாம் வணங்குவோமாக என்பதாம்.

(வி - ரை.) மூலம் - முதன்மை, அஃதாவது: கல் தோன்றாக் காலத்திற்கும் முற்பட்ட காலம்; மிகமிக முற்பட்ட காலம் என்பது இதன் திரண்ட பொருள். மூலப் பழமை: ஒருபொருட் பன்மொழி. மறைகளின் முடிபு, இறைவன் அளவற்ற ஆற்றல்களை எடுத்துப் பன்னியுரைப்பது. இறைவன் பிறப்பிறப்பற்றவன் ; திணைபால் கடந்த செம்பொருள் ; அதைப்பற்றி உரைத்து உரைத்து அவன் ஆற்றல் முழுமையும் விளக்கமுடியாமல் நிற்பதே வேதத்தின் இறுதி நிலையாக உண்மை, பல்வகை நூல்களால் அறியலாம். அம் மறையில் எங்கே எடுத்தாலும் முதன்மையாகக் கூறுவது ஞான காண்டம் கரும காண்டம் என்ற இரண்டி