இரணிய வதைப் பரணி

22

13

13. களம் காட்டல்: ( தாழிசைகள் 598-624 )

    படுகளம் பார்க்க, பேய்கள் ஒன்றை ஒன்று முற்பட ஓடின.

    களத்தின் காட்சி கொடியது நமக்கு;  இனியது  பேய்களுக்கு.  பிணங்களும், குருதியும், தேரும், போர்க் கருவிகளும், மலை என, ஆறு என, மரக்கலம் என, பாய் மரம் எனக் கிடந்த.

14. கூழ் அடுதல் ( தாழிசைகள் 614-683 )

    பேய்கள் செஞ்சோரி நீரில் குளித்தன; பிணக் குன்றில் ஏறி விளையாடின; நிணத்துகில் உடுத்தன; காகமும் பருந்தும் இட்ட காவண நீழலில் இருந்தன. காளியும் அவற்றோடு நீராடி, துகில் சாத்தி, செஞ்சடை முடித்து, பிண ஆதனம் ஏறி இருந்தாள்.

    பேய்கள் மடைப்பள்ளி அமைத்தன. மவுலி நிரை அடுப்பு; யானைக் கும்பம் பானை; குருதி சோரி உலை; தண்டு துடுப்பு; கணை மாரி விறகு; தானவர் உகுத்த பற்கள் பழ அரிசி; யானைகளின் புற அடி உரல்; யானைத் தந்தங்கள் உலக்கை.

    உலக்கையால் பற்களாகிய நெல்லைக் குற்றும் பாட்டு நரசிங்கத்தின் புகழ். இப்பகுதியில் ‘சும்மேலே சும்முலக்காய்’ என்ற பல உலக்கைப்பாட்டுக்கள் உள்ளன; கலிங்கத்துப்பரணியில் ‘சலுக்கு முலுக்கென்று குற்றீரே’ என்ற ஒரே பாட்டு உளது. உலக்கைப் பாட்டுக்கள் அஞ்ஞ மோகவதைப் பரணிகளிலும் உள்ளன.

    யானைக் காதுகளாகிய முறத்தால் குற்றிய அரிசியைத் தெள்ளி, உலையில் இட்டன; கூழ் குழிசியதும் குறள் பேய்கள் பிடித்து இறக்கின.

    இக் கூழை முத்துக்கள் கோர்த்த வெண்குடை ஆகிய பரிகலத்தில் ஏற்றி நாயகிக்கு அமைத்தன. குதிரைக் குளம்புகளைப் பொரித்து, யானை மதமெனும் நெய்யை வார்த்தன.

    வாகு வலையங்கள் மணிக்கால்களாக, மத்தளங்களைக் கவிழ்த்து, அவற்றின் மீது கூழைப் படைத்து உண்டன. கோபுர கலசங்கள் கரகம்; ஒட்டக முதுகு தண்ணீர்ச் சாடி. அணங்கு அமர்ந்தபின், பேய்கள் ஒரு மிடா ஒரு வாயாகக் கூழை உறிஞ்சின.

    பசியால் அடைத்த செவிகள் திறந்தன; வயிறு துருத்திபோல் விம்மிற்று; ஏப்பம் இட்டன.