பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்193

242.
கண்ணோக் கரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே
சலியாத கற்ப தரு.    
(36)

243.
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்
டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று.    
(37)

    242. ஈகையின் இலக்கணம் இதிற் கூறப்படும்.

    கண் நோக்கு அரும்பா - சேய்மைக்கண்ணே இரவலரைக் கண்டபோது இனிமையாகப் பார்த்தலே அரும்பாக. நகை முகமே நாள் மலரா - நெருங்கியவழி மலர்ச்சியோடு கூடிய முகமே அன்று மலர்ந்த மலராக. இன்மொழியாகிய வாய்மை தீங்காயாக; இன: வேண்டா வழிச்சாரியை; வாய்மை - உண்மை. தீங்காய் - இனிய காய். பலமா - பழமாக. நலம் கனிந்த - நற்குணங்கள் மிக்க. சலியாத - கொடுத்தலில் இளைத்தலில்லாத. பண்புடையார் சலியாத கற்பதரு அன்றே; கற்பதரு - கற்பகமரம். தெய்வ லோகத்திலுள்ள கற்பகம் கற்பகம் அன்று; வள்ளல்களே கற்பகத்தரு என்றபடி:

    கண்ணோக்கும் நகைமுகமும் அகத்தின் உவப்பை வெளிப்படுத்துவன. மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றாலும் விரும்பிச் செய்வது ஈகையென்று கொள்க.

    இச்செய்யுள் உருவகவணி.

    243. அரசனுடைய வருவாய் சிறிது குறைந்தாலும் அதனால் அரசனுக்குத் துன்பம் உண்டாகாது; ஆனால் அது கொண்டு வேறு பலர் பிழைப்பரென்பது கூறப்படும்.

    வாங்கும் கவளத்து - தாம் உட்கொள்ளும் கவளத்துள். ஒரு சிறிது - மிகச் சிறிய பாகம் . வாய் தப்பின் - வாயினின்றும் தவறி விழுமாயின். ஆங்கது: ஒரு சொல் நீர்மையன; ஆங்கு: அசைநிலையுமாம். ஒரு கோடி எறும்புகள் ஆரும் கிளையோடு அயின்று உய்யும்; ஆரும் கிளை - நிறைந்த சுற்றம். அயின்று - உண்டு.

    “அத்தி முதலெறும்பீ றானவுயிர்” (தனிப்.) என்பவாதலின் அவ்விரண்டையும் இயைபுபட அமைத்துக் குறியது அறித்தக்கது.

    இச்செய்யுள் அரசர்க்குக் குறிப்பாக நீதி கூறியபடி; இது பிறிது மொழிதல் என்றும், நுவலாநுவற்சி யென்றும், ஒட்டணி யென்றுத் கூறப்படும்.