பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

31

   சிற்றில் பருவம் : இளம் பெண்கள் தெருவில் மணலால் சிறு கற்களால் வீடுகட்டி விளையாடுவர் !  அவ் வீடுகளைக் குழந்தை சென்று தன் காலால் கலைத்துவிடும்.  அதனைக் கண்ட சிறுமியர்கள், குழந்தையை அவ்வாறு செய்ய வேண்டா என்று வேண்டிக்கொள்ளும் பருவம் சிற்றில் பருவம் ஆகும் அவ்வாறு தம் பொருட்டு வேண்டுவதோடின்றிப் பாட்டுடைத்தலைவன் இடத்தில் இரக்கங் கொண்டு, “உனது காலுக்கு ஊறுவருமே, காலில் புழுதி படியுமே “  என்று வேண்டிக்கொள்வதுமாகும்.  எனைய பருவங்கள் தாய்மார், தாதியர் வேண்டுதலாக அமையும்.  இப்பருவம் இளம்பருவப் பெண்கள் வேண்டுவதாக அமையும்.  இஃது இரண்டாம் ஆண்டு நிகழும் நிகழ்ச்சி என்பர்.  இப்பருவம் சிறுபறைப் பருவத்திற்குப் பின்னும் பாடப்பட்டதாகத் தெரிகிறது.  பிங்கலந்தை நிகண்டு, “இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும், மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும்“ என்று கூறுதல் காண்க. அதுபோது, சிற்றில் பருவ நிகழ்ச்சி மூன்றாம் ஆண்டிலும், சிறுபறைப்பருவ நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டிலும் அமையும். 

     திருவார் துறைசை வளர்ஞானச் செல்வா

        சிற்றில் சிதையேலே

     சிந்தா மணிஅம் பலவாண தேவா

        சிற்றில் சிதையேலே

                            - அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்

   சிறுபறைப் பருவம் :   இது குழந்தை தன் கையில் சிறிய பறை என்னும் தோல்கருவியாம் இசைக் கருவியை முழக்கு மாறுவேண்டும் பருவமாகும்.  இது மூன்றாம் ஆண்டில் நிகழும் என மேலே கூறப்பட்டது.  காரணத்தை ஆண்டுக் காண்க.

     திரைமுழங் கும்சித்திர சபைநடனம் அருள்புதல்வ

        சிறுபறை முழக்கி அருளே

     செழுமறை  முழக்கமுறு திருமலை அருட்குமர

        சிறுபறை முழக்கி அருளே

                              -திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்