32

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

  சிறுதேர்ப்பருவம் : குழந்தை குதிரை பூட்டப் பெறாத விளையாட்டுத் தேரினை உருட்டுமாறு வேண்டும் பருவம் ஆகும்.  “ நான்காம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் “  என்பது பிங்கலந்தை.    

     தெய்வகுஞ் சிதபதம் புகுந்துவாழ் கின்றபர

        சிறுதேர் உருட்டி அருளே

     சீதவள நிறைதில்லை மாதர்மிக உறைசெல்வ

        சிறுதேர் உருட்டியருேள.

                               ---  மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ் 

   இதுவரை ஆண்பால்பிள்ளைத்தமிழ்ப் பருவங்களைப் பற்றிய விளக்கம் தரப்பட்டது.  இனிப் பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய விளக்கங்களைக் காண்போமாக.  பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பத்துப் பருவங்களைப் பற்றிய தனி விளக்கம் தேவை இல்லை.  ஆண்பால் பிள்ளைத்தமிழில் வரும் முதல் ஏழு பருவங்களும் பெண்பால் பிள்ளைத்தமிழ்க் குரியனவாகும்.  பெண்பாலுக்கு எட்டாம் பருவம் முதல் பத்தாம் பருவம் வரையில் அமைந்தவை சிறப்புப் பருவங்கள்.  அவை அம்மானை, நீராடல், ஊசல் என்பன்.  இனி இப்பருவங்கள் பற்றிய விளக்கங்களை ஈண்டுக் காண்போமாக.

     அம்மானைப் பருவம் :   அம்மானை, என்பது பெண்கள் மேலே எறிந்து தம் கையில் பிடிக்கும் ஒரு காய் ஆகும்.  இதனை அம்மானைக் காய் என்பர்.  இதனைக் குமரகுருபரர்.  பொன் அம்மானை.  மாணிக்க அம்மானை நீல அம்மானை காய்களை வைத்தும் ஆடுவதாகக் கூறியுள்ளனர். “நல்தரள அம்மனை“ என்பதால், முத்தால் செய்யப்பட்ட அம்மானைக் காய் உண்டு என்பதும் தெறிகிறது.  இக்காய் செல்வச் சிறப்புக்கு ஏற்ப அமையும். 

     தூண்டா விளக்கே நல்லூராய்

        தொட்டா டுகபொன் அம்மனையே

     தோன்றாத் துணைக்கோர் துணைஆனாய்

        தொட்டா டுகபொன் அம்மனையே

                               - திருவெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ்