பக்கம் எண் :

198சித்தர் பாடல்கள்

சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே.
78
  
ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக்
காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே.
79
  
காலனெனுங் கொடிதான கடும்ப கையைநாம்
கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்
தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்
தற்பரங் கண்டோமென் றாடாய் பாம்பே.
80
  
தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து
திகையாமற் சிற்சொரூப தெரிச னைகண்டு
வானிற் பறந் திடச்சூத வான்ம ணிதீர்ந்து
வாயிற்போட் டேகநீநின் றாடாய் பாம்பே.
81
  
தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன்
சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்
தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம்
சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே.
82
  
ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே
அரசடிப் பொந்திலே புகுந்து கொண்டாய்
வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து
வாங்கியே தூங்கிநின் றாடாய் பாம்பே.
83
  
நாலு தெருவினிலே நாலு கம்பம்
நடுத்தெரு வினிலேயோ பொன்னுக் கம்பம்
போலும் விளங்குபொன்னுக் கம்பத்தி னுக்கே
பூமாலை சூட்டிநின் றாடாய் பாம்பே.
84
  
ஆழிபெயர்ந் தாலுமேரு மட்டேயலையும்
அடியோடு பெயர்ந்தாலு மன்றிக் கால
ஊழிபெயர்ந்து தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே.
85