பக்கம் எண் :

202சித்தர் பாடல்கள்

இவ்வுலக வாழ்வுதானு மின்றே அறுமென்று
எண்ணிக்கர்த்தன் அடிநினைந் தாடாய் பாம்பே.
108
  
மணக்கோலங் கொண்டுமிக மனம கிழ்ந்துமே
மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலங் கண்டுபின்னுந் துறவா விட்டால்
பிறப்புக்கே துணையாமென் றாடாய் பாம்பே.
109
  
பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்
பெருமருந் தொன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகையறிந் தாடாய் பாம்பே.
110
  
இறந்தவர் ஐவரவர் இட்ட மானவர்
எய்தும்அவ ரிறந்தாரென் றெல்ல வார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணினி லுள்ளோர்
வகையறிந் திடவேநின் றாடாய் பாம்பே.
111
  
        எண்சீர் விருத்தம்

ஆகார முதலிலே பாம்ப தாக
   ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்தொ டுங்கி
   ஓடி வகாரத்தி னாவை நீட்டிச்
சீகாரங் கிடந்ததோர் மந்திரத் தைச்
   சித்தப்பி டாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர றுத்து
   மாயபந்தங் கடந்தோமென் றாடாய் பாம்பே.
112
  
தந்திரஞ் சொல்லுவார் தம்மை யறிவார்
   தனிமந்தி ரஞ்சொல்லுவார் பொருளை யறியார்
மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
   மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரஞ் சென்றுமே வேர்பி டுங்கி
   அருளென்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீ ராகில்
   இனிப்பிறப் பில்லையென் றாடாய் பாம்பே.
113