பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்203


களிமண்ணி னாலொரு கப்பல் சேர்த்தே
   கனமான பாய்மரங் காண நாட்டி
அளிபுலந் தன்னையே சுக்கா னாக்கி
   அறிவென்னு மாதாரச் சீனி தூக்கி
வெளியென்னும் வட்டத்தே யுள்ள டக்கி
   வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்
தெளிவுறு ஞானியா ரோட்டுங் கப்பல்
   சீர்பாதஞ் சேர்ந்ததென் றாடாய் பாம்பே.
114
  
உள்ளத்துக் குள்ளே யுணர வேண்டும்
   உள்ளும் புறம்பையு மறிய வேண்டும்
மெள்ளக் கனலை யெழுப்ப வேண்டும்
   வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டுக்
   கண்ணுக்கு மூக்குமேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
   சீர்பாதம் கண்டோமென் றாடாய் பாம்பே.
115
  
ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே
   உள்ளும் புறம்பையு மறியவேண்டும்
ஆங்காரக் கோபத்தை யறுத்து விட்டே
   ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே
சாங்கால மில்லாமற் தாணு வோடே
   சட்டதிட்ட மாய்ச்சேர்ந்து சாந்த மாகத்
தூங்காமல் தூங்கியே சுக மடைந்து
   தொந்தோம் தொந்தோமென் றாடாய் பாம்பே.
116
  
விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
   வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்க ளைப்பிடுங்கி இரைகொ டுப்போம்
   காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
   சுற்றிவலம் வந்து நித்ய சூட்சங் கண்டும்
உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்டோம்
   ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே.
117